மெட்ரோ ரயிலுக்கு இணையாக புறநகர் ரயில்களிலும் ஏசி! கட்டணம்தான் அதிகம்.. எங்கு தெரியுமா?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயிலில் உள்ளது போல் ஏசி வசதி கொண்ட புறநகர் ரயில்களை கூடுதலாக இயக்க மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
கோடை காலத்தில் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும், மெட்ரோ ரயில்களில் உள்ளது போலவும் புறநகர் ரயில்களில் கூடுதலாக ஏசி வசதியை செய்ய மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதாவது மும்பை மாநகரில் இயங்கும் புறநகர் ரயில்கள் தினமும் 20 சர்வீஸ்கள் ஏசி வசதி கொண்டதாக இருக்கும்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஏசி வசதி கொண்ட உள்ளூர் ரயில்கள் 2017ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு ஏசி வசதி கொண்ட ரயில்களை கூடுதலாக 8 சர்வீஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்னர் இயக்கப்பட்ட 12 ஏசி ரயில்களில் 20,000 பயணிகள் பயன்படுத்தினர். தற்போது கூடுதலாக இயக்கப்படும் ரயில்கள் சர்ச்கேட், கோரேகான், போரிவிலி, நலசோப்ரா உள்ளிட்ட நிலையங்களில் இயக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த ரயில்கள் காலை மற்றும் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களில் மட்டும் இயக்கப்படும் என்றும் மேற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நெரிசல் மிகுந்த நேரத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஏசி ரயில்களில் பயணம் செய்வதற்கான கட்டணம் மெட்ரோ ரயில்களில் வசூலிக்கப்படுவது போல் இருக்கும் எனவும் ஏற்கனவே சாதாரண ரயில்களில் பயணம் செய்ய சீசன் டிக்கெட் எடுத்தவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுமார் 35 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்டபோது 52 சதவீதம் பேர் புறநகர் ஏசி ரயில்களில் பயணக் கட்டணத்தை குறைக்கவேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தனர்.
ஏற்கனவே புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் செல்பவர்களை கண்டுபிடித்து அபராதம் வசூலிப்பதே ரயில்வே அதிகாரிகளுக்கு ஒரு சவாலாக உள்ளது. தற்போது சாதாரண ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்துவிட்டு ஏசி ரயிலில் பயணம் செய்பவர்களை கண்டறிந்து அபராதம் விதிப்பதென்பது மும்பை மக்கள் தொகையை பொறுத்தவரை சற்று சிரமம்தான்.












Click it and Unblock the Notifications