"மோடி அரசை இந்த விஷயங்களுக்கு பாராட்டியே தீரணும்.." ப.சிதம்பரம் சொன்ன மேட்டர்.. உற்று பார்த்த மக்கள்
மும்பை: மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவர் ப. சிதம்பரம். இவர் கடந்த காலங்களில் பாஜக மீது பல நேரங்களில் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர், மத்திய பாஜக அரசு குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மோடி அரசின் 3 பலம் என்ன, 3 பலவீனங்கள் என்ன என்ற கேள்விக்கு அவர் விரிவான பதிலை அளித்துள்ளார்.
மும்பையில் பிரபல ஆங்கில ஊடகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவரும் விரிவாகப் பதிலளித்தார்.

ப. சிதம்பரம் பதில்: மத்திய அமைப்புகளை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருவது, விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது, ஒருதலைபட்சமான உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை நரேந்திர மோடி அரசின் மூன்று பலவீனங்கள் என்று அவர் பட்டியலிட்டார். அதேநேரம், தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்தியது உள்ளிட்ட சில நடவடிக்கைகளுக்காக பாஜக கூட்டணி அரசைப் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் முக்கியமானது. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேம்பட்டுள்ளது உண்மை தான் என்றாலும் நாம் முழுமையாகப் பணமில்லா சமூகத்தை நோக்கி நகர்கிறோம் என்ற மத்திய அரசின் கருத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஜெர்மனியும் ஐரோப்பாவும் கூட இன்னும் முழுமையாகப் பணமில்லாத சமூகமாக மாறவில்லை. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான நாளில் 16-17 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. இன்று அது 34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மக்கள் ரொக்கத்தை விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. எனவே, ரொக்கத்தை சும்மா திடீரென விட்டுவிட முடியாது" என்றார்.
தொடர்ந்து மோடி அரசு குறித்துப் பேசிய சிதம்பரம், "நடுநிலையாக இயங்க வேண்டிய அமைப்புகளை பாஜக தன்வசப்படுத்தி இருக்கிறது. சுற்றுச்சூழல் குழுக்களில் 60-70% காலியாக உள்ளன. இருப்பினும், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக அரசு மேற்கொள்ளும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் ஏழைகளின் நலனைக் கருத்தில் கொண்டதாக இல்லை.
மக்கள் அவதி: அவர் மேலும் கூறுகையில், "வந்தே பாரத் ரயில்களை இயக்க ஸ்லீப்பர் வகுப்பில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ரயில் கட்டணங்களும் 30-40% உயர்த்தப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் சொகுசு மெர்சிடிஸ் காரை ஓட்ட நெடுஞ்சாலைகளை உருவாக்குகிறீர்கள். ஆனால் கிராமங்களுக்கும் சேர்ந்து சாலைகளை அமைக்கவும்.
விசாரணை அமைப்புகளையும் மோடி அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது. நாடு முழுக்க இந்த பாஜக அரசு செய்துள்ள அசுத்தங்களைச் சுத்தம் செய்ய நான் துப்புரவு அமைச்சராக விரும்புகிறேன்" என்றும் கிண்டலாக அழர் பதிலளித்தார்.
ஜிஎஸ்டி: ஜிஎஸ்டி குறித்துப் பேசிய அவர், "இப்போது பல நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன. எங்கு நள்ளிரவில் யாரேனும் தங்கள் கதவைத் தட்டி வரி கேட்பார்களோ என்ற அச்சம் தொழிலதிபர்களிடம் உள்ளது. ஜிஎஸ்டி அதிகாரிகள் இப்போது மக்களைக் கைது செய்து மிரட்டுகிறார்கள். ஜிஎஸ்டி துறை இன்னொரு அமலாக்கத் துறையாகவும் சிபிஐ போவும் ஆகப் போகிறது என்ற அச்சம் மக்களிடையே உள்ளது" என்றார்.
பாஜகவை பாராட்ட வேண்டும் என்றால் எதற்குப் பாராட்டுவீர்கள் என்ற கேள்விக்கு அவர், "உள்கட்டமைப்பு திட்டங்கள்.. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இது அடல் பிஹாரி வாஜ்பாயின் தங்க நாற்கர திட்டத்துடன் தொடங்கியது. நாங்கள் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றோம். இப்போது மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கும் அதைச் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications