மகாராஷ்டிராவின் X ஃபேக்டர்.. "பாஜக vs காங்கிரஸ்!" அங்கு வெற்றி தோல்வியை தீர்மானிக்க போவதே இதுதான்!
மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு X ஃபேக்டராக உள்ள 5 மேஜர் விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம். அங்கு கடும் போட்டி நிலவும் சூழலில், இந்த 5 விஷயங்கள் தான் அங்கு நிச்சயம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகும் விஷயங்களாக இருக்கும்.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவ. 20ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த முறை X ஃபேக்டராக உள்ள 5 மேஜர் விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

பெண் வாக்குகள்: தற்போதுள்ள பாஜக கூட்டணி அரசு அங்கு மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ 2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்காக மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் 2.34 கோடி பெண்கள் பலனடைந்துள்ளனர். இது அங்குள்ள ஒட்டுமொத்த பெண் வாக்காளர்களில் கிட்டதட்ட 50% ஆகும்.
அதாவது சராசரியாக ஒரு தொகுதியில் 80,000 பெண்கள் இதன் மூலம் பலன் பெறுகிறார்கள். பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தால் இந்த தொகை ரூ. 2,100ஆக உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ஷிண்டே அறிவித்துள்ளார். இதற்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மகாராஷ்டிராவில் பெண் வாக்காளர்கள் கணிசமாக இருக்கும் நிலையில், இது பாஜக கூட்டணிக்குப் பெரியளவில் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
மண்டலம் வாரியாக கள நிலவரம்: மகாராஷ்டிராவை நாம் ஆறு மண்டலங்களாகப் பிரிக்கலாம்.. அதில் விதர்பா, மராத்வாடா மற்றும் வடக்கு மகாராஷ்டிரா ஆகியவை பொருளாதார ரீதியில் பின்தங்கிய பகுதிகள். அதேநேரம் மும்பை, தானே-கொங்கன் மற்றும் மேற்கு மகாராஷ்டிரா ஆகிய மண்டலங்கள் வளர்ந்த பகுதிகள். அதாவது ஒரே மாநிலத்தில் நேர் எதிரான இரு நிலைமைகள் உள்ளன. நாட்டின் மொத்த ஜிடிபி-க்கு அதிகபட்ச பங்களிப்பை (13.3%) தரும் மகாராஷ்டிராவில் தான் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகமாக இருக்கிறது.
விவசாயிகள் அதிகம் இருக்கும் விதர்பா, மராத்வாடா பகுதிகளில் வறட்சி, வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவை முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ள நிலையில், அதற்கு இங்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மும்பை மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், தானே-கொங்கனில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.
கூட்டணி: கூட்டணி அமையும் போது ஒரு கட்சியின் வாக்குகள் கூட்டணிக்குள் இருக்கும் மற்றொரு கட்சிக்கு எப்படிச் செல்கிறது என்பதும் முக்கியம். மகாராஷ்டிராவில் ஒரு வினோதமான கூட்டணி இருக்கிறது. அங்கு பாஜக, காங்கிரஸ் என இரு கூட்டணியிலும் சிவசேனா மற்றும் என்சிபி இருக்கிறது. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் சிவசேனா இதுவரை எல்லா சட்டசபைத் தேர்தல்களிலும் காங்கிரஸ்- என்சிபி எதிராகவே போட்டியிட்டுள்ளது. அதேபோல என்சிபி கட்சியும் பாஜக, சிவசேனா எதிராகவே எப்போதும் போட்டியிட்டுள்ளது.
இதனால் கூட்டணிக்குள் வாக்குகள் எப்படி மூவ் ஆகிறது என்பதும் முக்கியம்.. கடந்த தேர்தலில் ஒப்பீட்டளவில் பாஜக கூட்டணியைக் காட்டிலும் காங்கிரஸ் கூட்டணிக்குள் வாக்கு பகிர்வு அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாகவே அங்கு அதிக இடங்களைக் காங்கிரஸால் வெல்ல முடிந்தது. அதேபோல அங்குள்ள முஸ்லீம் வாக்காளர்கள் கிட்டதட்ட அப்படியே காங்கிரஸ் கூட்டணி பக்கம் வந்துள்ளதும் ஒரு பிளஸ் பாயிண்டாக இருக்கிறது.
மராத்தா விவகாரம்: அதேபோல மராத்தா இட ஒதுக்கீடு விவகாரமும் அங்கு மிக முக்கிய விஷயமாக மாறி இருக்கிறது. மராத்தா மக்களுக்கு பாஜக கூட்டணி அரசு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது தேர்தலில் முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது. அதேநேரம் உயர் சாதியினர், ஓபிசி பிரிவினர் ஆதரவு அங்கு பாஜகவுக்கே இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுயேச்சைகள்: இதுபோன்ற காரணங்களால் மகாராஷ்டிராவில் இந்த முறை கடுமையான போட்டி இருக்கும் என்றே தெரிகிறது. இந்தளவுக்கு கடும் போட்டி இருக்கும் போது சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகள் பெறும் வாக்குகள் முக்கியமானதாக இருக்கும். அவை தான் வெற்றி, தோல்வியை மாற்றுவதாக இருக்கும். கடந்த 2019ல் இவர்கள் 24.3% வாக்குகளைப் பெற்றிருந்தனர். மேலும், அப்போது சுமார் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றவருக்கும் 2ம் இடம் பெற்றவருக்கும் இடையே இருந்த வாக்கு வித்தியாசம் 5000 வாக்குகளுக்குக் குறைவாக இருந்தது. இந்த முறையும் அதேபோல கடும் போட்டி இருக்கும் என்றே தெரிகிறது.
மகாராஷ்டிராவில் கடும் போட்டி நிலவும் சூழலில், இந்த 5 முக்கியமான ஃபேக்டர்கள் தான் அங்கு வெற்றி கோட்டினை தாண்டுவது யார் என்பதை முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications