"பாஜக கூட்டணிக்கு வாங்க!" அழைப்பு விடுத்த மோடி! இரண்டே வரியில் சரத் பவார் நறுக் பதில்
மும்பை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சரத் பவார் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்த நிலையில், இதற்கு சரத் பவாரே இப்போது பதிலளித்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிராவில் இன்னும் 24 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

அழைப்பு: சமீபத்தில் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய நரேந்திர மோடி பாஜக கூட்டணியில் சேர சரத் பவாருக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். காங்கிரஸுடன் இணைந்து கட்சியை மொத்தமாக அழிப்பதற்கு பதிலாக அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவிடம் வாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இரண்டே வரியில் பதில்: இந்த அழைப்பிற்குப் பதிலளித்துள்ள சரத் பவார், நேரு-காந்தி சித்தாந்தத்தை விட்டுவிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவர்களுடன் கைகோர்க்க மாட்டேன் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
பின்னணி என்ன: வரும் காலத்தில் சிறிய பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸுடன் நெருக்கமாகப் பயணிக்க வேண்டும் அல்லது காங்கிரஸ் உடனேயே கட்சியை இணைத்துவிட வேண்டும் என்று சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சரத் பவார் பேசியிருந்தார். அங்கு சரத் பவார் மேலும் பேசுகையில், "லோக்சபா தேர்தல் 3 கட்டம் முடிந்துள்ள நிலையில், இது பிரதமர் மோடியின் அமைதியைக் கெடுத்துவிட்டது. இதன் காரணமாகவே முஸ்லிம் சமூகம் குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளார்.
அரசியலில் வகுப்புவாத சிந்தனைகள் கொண்டு வருவதன் மூலம் நிலைமை மாறும் என்று அவர் நினைக்கிறார். லோக்சபா தேர்தல் முடியும் போது பிரதமர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதாலேயே அவர் இப்படிச் செய்கிறார்" என்று சரத் பவார் பேசியிருந்தார். மேலும், வரும் காலத்தில் பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் உடன் நெருக்கமாக இணைந்து பயணிக்க வேண்டும் அல்லது காங்கிரஸ் கட்சி உடனேயே இணைந்துவிட வேண்டும் என பேசியிருந்தார்.
மோடி: இதை விமர்சிக்கும் வகையில் சரத் பவார் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி சாடி பேசியிருந்தார். அதாவது போலி என்சிபி மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்தால் நல்லது என்று கூறியிருந்தார். மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "மகாராஷ்டிரா அரசியலில் 40-50 ஆண்டுகள் அனுபவம் கொண்ட தலைவர் ஒருவர் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி வருகிறார்.
இதுவரை நடந்த வாக்குப்பதிவால் அவர் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார். பலரிடம் ஆலோசனை நடத்திய பிறகு அவர் சிறிய பிராந்தியக் கட்சிகள் அரசியலில் நிலைத்திருக்க வேண்டுமானால், அவை காங்கிரஸுடன் இணைய வேண்டும் என்று கூறியிருக்கிறார். நான் என்ன சொல்கிறேன் என்றால் இங்குள்ள போலி என்சிபி மற்றும் போலி சிவசேனா ஆகியவை காங்கிரஸுடன் இணைவதற்குப் பதிலாக பாஜக கூட்டணியில் இணையலாம்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications