"உடைந்த உறவுகள்.." காயத்தை ஆற்ற நமக்கு செல்ல பிராணிகள் ரொம்பவே முக்கியம்.. மும்பை கோர்ட்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரிந்து சென்ற கணவரிடம் இருந்து பராமரிப்பு தொகை கோரி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளைப் பராமரிக்க ஆகும் செலவு குறித்து நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 55 வயதான பெண் ஒருவர் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில் தனது வயது, உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மூன்று ராட்வீலர் நாய்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி அந்த பெண் தனது பிரிந்த கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரியிருந்தார்.

அந்த பெண்ணின் மனுவை அனுமதித்த நீதிமன்றம் இடைக்காலப் பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் ரூ. 50,000 வழங்க உத்தரவிட்டது. மேலும், செல்லப் பிராணிகளைப் பராமரிக்க ஆகும் செலவு குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
வழக்கு: குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005ன் பிரிவு 12ன் கீழ், பராமரிப்புக்காக அந்தப் பெண் இடைக்கால விண்ணப்பத்தைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி கோமல்சிங் ராஜ்புத் என்பவர் விசாரித்தார். இந்த வழக்கில் அந்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்வேதா ஆர் மோரே, "இருவருக்கும் 1986ல் திருமணம் நடந்தது.. இவர்களின் இரண்டு திருமணமான மகள்கள் இப்போது வெளிநாட்டில் உள்ளனர்.
இரு தரப்பிற்கும் இடையே கடந்த 2021ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.. அப்போது பெண்ணை பிரிந்த அவரது கணவர் பராமரிப்பு மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால் அவர் தனது வாக்குறுதியைப் பின்பற்றவில்லை.. அவர்கள் ஒன்றாக இருந்தபோது பெண்ணின் மீது குடும்ப வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
3 நாய்கள்: அந்த பெண்ணுக்கு இப்போது எந்தவொரு வருமானமும் இல்லை சில உடல்நலப் பிரச்சினைகளும் இருக்கிறது. மேலும், மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். அதேநேரம் மனைவியை இப்படிப் பிரிந்து சென்ற அந்த நபர் இப்போது வேறு ஒரு நகரத்தில் பிஸ்னஸ் செய்து வருகிறார். அவருக்கு வருமானம் வருகிறது. எனவே அவர் மாதம் 70,000 ரூபாய் இடைக்கால பராமரிப்பு செலுத்த வேண்டும்" என்று வாதிட்டார்.
இருப்பினும், தன் மீதான குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை அந்த பெண்ணின் கணவர் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், அந்த பெண் தானாக வீட்டை விட்டு வெளியேறினார் என்றும் வாதிட்டார். மேலும், தனக்கு நிலையான வருமானம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர் பிஸ்னஸில் கூட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பராமரிப்பு தொகையை வழங்க முடியாது என்றும் தெரிவித்தார். பிரிந்த இருந்த காலத்தில் ஏற்கனவே அந்த பெண்ணுக்கு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தியதாகவும் அவர் கூறினார்.
ஏற்க மறுப்பு: அந்த நபரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், குடும்ப வன்முறை ஏற்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் இதனால் அந்த பெண் இடைக்கால வன்முறைக்குத் தகுதி பெற்றுள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், பெண்ணின் வயது மற்றும் நோய்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி, செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கும் ஆகும் செலவையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், இதைப் பொருளாதார வன்முறை எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு பிஸ்னஸில் நஷ்டம் அடைந்ததற்கான எந்தவொரு சான்றையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் அப்படியே நஷ்டமாகியிருந்தாலும் அவரால் தனது பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், இரு தரப்பும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கருத்தில் கொண்டே பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
நீதிமன்றம் உத்தரவு: செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவைக் கருத்தில் கொள்ளக் கூடாது என்பதை ஏற்க மறுத்த நீதிபதி பராமரிப்புத் தொகையைக் குறைக்க இது ஒரு காரணமாக இருக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், செல்லப்பிராணிகள் என்பது ஒரு கண்ணியமான வாழ்க்கையில் ஒரு பகுதி எனக் குறிப்பிட்ட அவர் பிரிந்த உறவுகளால் ஏற்பட்ட வலியைச் சரி செய்ய மனிதர்களுக்கு அவை அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications