பாத்ரூமில் இரண்டாவது மனைவியுடன் பலியாகி கிடந்த ஆண்! பக்கத்தில் இருந்த அந்த மர்ம பொருள்! பரபரப்பு
மும்பையில் மர்மமான முறையில் கண்டறியப்பட்ட உடல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஹோலி கொண்டாடி விட்டுக் குளிக்கச் சென்ற ஜோடி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இப்போது பெரிய மர்மமாக உருவெடுத்துள்ளது.
ஹோலி என்பது இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். தென் இந்திய நகரங்களில் பெரியளவில் ஹோலி கொண்டாட்டங்கள் இருக்காது. அதேநேரம் வட இந்தியாவில் இது மிகச் சிறப்பாகவே கொண்டாடப்படும்.
அதன்படி இந்தாண்டு ஹோலி பண்டிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வண்ணங்களின் திருவிழாவான ஹோலியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர்.

இரு சடலங்கள்
இதனிடையே ஹோலி கொண்டாடித் திரும்பிய இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த புதன்கிழமை மும்பை அடுத்துள்ள காட்கோபரில் பகுதியில் ஒரு தம்பதி குளியலறையில் ஜோடியாக இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. இவர்களின் உயிரிழப்பு குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜாவாடி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மர்மம்
உயிரிழந்த இருவரும் தீபக் ஷா (44) மற்றும் டினா ஷா (39) என அடையாளம் காணப்பட்டனர். தீபக் ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ளார்.. அந்த தம்பதி கடந்த செவ்வாய்க்கிழமை ஹோலியை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடினர். கொண்டாட்டம் முடிந்து வீட்டுக்குச் சென்ற நிலையில், சில மணி நேரம் கழித்து அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்களின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் கொலை, மூச்சுத் திணறல், மின்சார ஷாக் காயம் காரணமாக மரணங்கள் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மரணம் குறித்த மர்மம் தொடர்கிறது.

அந்த 6 மணி நேரம்
அவர்கள் உயிரிழக்கும் முன்பு சுமார் 6 மணி நேரம் என்ன செய்தார்கள் என்று தெரியாத நிலையில், அதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். மரணத்திற்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதியற்றதாக இருந்தாலும், கொலை, மூச்சுத் திணறல் அல்லது வெளிப்புற காயங்கள் எதுவும் மரணத்திற்குக் காரணமில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குளியலறையில் ஹீட்டர் இருந்தபோதும் அது ஆனில் இல்லை என்பதால், அதில் இருந்து கேஸ் லீக் ஆகி உயிரிழக்கவும் வாய்ப்பு குறைவு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மர்ம பொருள்
அவர்கள் மேலும் கூறுகையில், "அவர்கள் உடல்கள் கண்டறியப்பட்ட போது, குளியலறையின் கதவும், டாய்லெட் மற்றும் குளியலறையைப் பிரிக்கும் கண்ணாடிக் கதவும் லேசாகத் திறந்தே இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவும் வாய்ப்பில்லை.. இருவரின் முக்கிய உறுப்புகள் இப்போது கலினாவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.. அங்கு உடலில் விஷப்பொருள் ஏதேனும் உள்ளதா என்று பார்க்கச் சோதனை நடத்தப்படும். அவர்கள் சடலத்திற்கு அருகே குளியலறையில் வாந்தி போன்ற ஒரு பொருளும் இருந்தது. அதையும் சோதனைக்கு அனுப்பியுள்ளோம்" என்றனர்.

அன்று என்ன நடந்தது
இதற்கிடையில், அவர்கள் உயிரிழக்கும் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை தம்பதி என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர். அந்த தம்பதி தங்கள் ஐந்து நண்பர்களுடன், செவ்வாய்க்கிழமை காலை ரிதம்பரா கல்லூரிக்கு அருகே உள்ள மைதானத்தில் ஹோலியை கொண்டாடியதாகத் தெரிகிறது. அங்கிருந்து அவர்கள் 3.30 மணிக்குத் திரும்பி விட்ட போதிலும், வீட்டிற்கு 9.30 மணிக்குத் தான் வந்துள்ளனர். இடையில் ஆறு மணி நேரம் அவர்கள் எங்குச் சென்றார்கள் என்று தெரியவில்லை. அது குறித்தே போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

போலீசார் விசாரணை
போலீசார் மேலும் கூறுகையில், "கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை... எனவே அவர்கள் எப்போது வீட்டிற்கு வந்தார்கள் என்று துல்லியமாகத் தெரியவில்லை.. இருப்பினும், அவர்கள் 9.30 மணியளவிலேயே வந்ததாக வாட்ச்மேன் கூறுகிறார். அவர்கள் இடைப்பட்ட ஆறு மணி நேரம் எங்குச் சென்றார்கள் என்பதைக் கண்டறிய நாங்கள் குழுக்களை அமைத்துள்ளோம்" என்றார். இதனிடையே தம்பதியின் இறுதிச் சடங்குகள் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டன. தீபக்கும் டினாவும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தீபக்கிற்கு இது இரண்டாவது திருமணமாகும். அவருக்கு ஏற்கனவே திருமணத்தில் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications