கட்டாயம்.. ஹலோவுக்கு பதில் ‛வந்தே மாதரம்’ சொல்லுங்க.. மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் செல்போன்களில் பேசும்போது ‛ஹலோ' என கூறுவதற்கு பதில் ‛வந்தேமாதரம்' என்பதை கட்டாயம் கூற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தின. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இந்த ஆட்சி கடந்த இரண்டை ஆண்டுகள் நடந்தது.
இதையடுத்து சிவசேனா கட்சியை சேர்ந்த 30க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிரா அரசு உத்தரவு
இதைடுத்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள்-பாஜகவினர் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இதில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வரானார். இந்நிலையில் தான் மகாராஷ்டிரா அரசு புதிய தீர்மானத்தை நிறைவேற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரம் என பேச
அதன்படி அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் செல்போன். தொலைபேசியில் பேசும்போது ‛ஹலோ' என கூறுவதற்கு பதில் ‛வந்தேமாதரம்' என கூற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் சந்திக்கும் மக்களிடமும் ‛வந்தே மாதரம்' எனக்கூறியே வணக்கம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஹலோ மேற்கத்திய கலாச்சாரம்
மேலும் ஹலோ என்பது மேற்கத்திய கலாச்சாரமாகும். இது வெறும் சாதாரண வார்த்தையாகும். இதில் ஒருவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான அர்த்தத்தை கொண்டது அல்ல. மேலும் ஹலோ எனும் வார்த்தை இருவருக்கும் இடையே எத்தகைய பாசத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உத்தரவின் பின்னணி
முன்னதாக ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை விரிவாக்கம் செய்த நிலையில் அம்மாநில கலாசாரத்துறை அமைச்சரான சுதிர் முங்கந்திவார் அரசு ஊழியர்களுக்கு வாய்மொழியா உத்தரவு பிறப்பித்தார். அப்போது, ‛‛அரசு ஊழியர்கள் செல்போனில் ‛ஹலோ' என கூறுவதற்கு பதில் ‛வந்தேமாதரம்' என கூற வேண்டும். இது எனது விருப்பம். வந்தேமாதரம் என்பது வெறும் வார்த்தையல்ல. ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்கும் உணர்வு. இதன்மூலம் நாட்டின் மீதான பற்று அதிகரிக்கும்'' என்றார். மேலும் இதுதொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications