விமானம் தயாரித்த முதல் ஆள்; கார் தயாரித்த முதல் நபர்! உலகம் வியந்த இந்திய தொழிலதிபர்!
மும்பை: இந்தியாவில் முதல் விமானத் தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கியவர், முதல் கப்பல் தொழிற்சாலையை உருவாக்கியவர், முதல் கார் தொழிற்சாலைக்கு விதை போட்டதும் இவர்தான். இந்தியப் போக்குவரத்துத் துறையின் தந்தை எனப் போற்றப்படும் இந்தத் தோஷி யார் என்று தெரியுமா?
பன்னாட்டு கார் தொழிற்சாலைகளை இந்தியாவில் வந்து தொடங்குவதற்காக ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகின்றன. அதன் மூலம் வேலைவாய்ப்பு, ஜிடிபியை உயர்த்த திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதேபோல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விமானநிலையமும் அதிநவீனமாக மாற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு நாட்டு விமானங்கள் இந்தியாவுக்கு வந்துபோகின்றன. ஒருநாளாவது இந்தியாவில் முதல்முதலாக விமானத் தொழிற்சாலையை யார் உருவாக்கி இருப்பார் என்பதை யோசித்துப் பார்த்திருப்போமா? இந்தியாவின் முதல் கார் தொழிற்சாலையை யார் உருவாக்கினார்? அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? அவர் பெயர் என்ன? என்பது பற்றி நமக்கு ஏதாவது தெரியுமா?

நிலவில் முதன்முதலில் கால்வைத்தவரை நமக்குத் தெரியும்? இந்தியாவுக்கு வந்த முதல் பயணி யார் என்பது நமக்குத் தெரியும்? ஆனால், இதில் ஒரு சோகம் என்னவென்றால், நம் நாட்டில் விமானத் தொழிற்சாலையை உருவாக்கி இந்தியாவை வழிநடத்திய முன்னோடி தொழிலதிபர் யார் என்று நமக்குத் தெரியாது.
இந்தியாவில் முதல் விமானத் தொழிற்சாலை மட்டும் அல்ல; கார் தயாரிக்கும் கம்பெனி, கப்பல் கட்டும் தளம் எனப் பலவற்றை உருவாக்கியவர் வால்சந்த் ஹிராசந்த் தோஷி. இவர் அன்றைக்குச் சுருக்கமாக 'சேத் வால்சந்த்' என்று அழைக்கப்பட்டார். குறுகிய காலத்தில், ஒரு தொழில்துறை சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் இவர். விமானம், ஆட்டோமொபைல், கப்பல் போக்குவரத்து, கட்டுமானம், சர்க்கரை ஆலை என இந்தியாவின் பெரும்பாலான தொழில்களை சேத் ஹிராசந்த் தனது கடன் பட்டியலில் வைத்திருந்தார். சுதந்திரத்திற்கு முன் ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட சுதேசி தொழிலதிபர் இவர். அதாவது மேக் இன் இந்தியாவுக்கு முதலில் விதைப் போட்டவர்.

யார் இந்த வால்சந்த் ஹிராசந்த் தோஷி?: இந்தியாவில் நவம்பர் 23, 1882இல் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறிய கிராமமான சோலாப்பூரில்தான் இவர் பிறந்தார். 1899 ஆம் ஆண்டு சோலாப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக் பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு மும்பை பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்றார். படித்து முடிந்த பிறகு இவர் தனது தந்தையின் குடும்ப தொழிலான பருத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்திற்குப் பின் வால்சந்த் தனது குடும்பத் தொழிலை விட்டுவிட்டு கப்பல் கட்டுதல், விமானத் தயாரிப்பு எனத் தனது சாகசப் பயணத்தை மேற்கொண்டார். சிவில் இன்ஜினியரிங், கடல்சார் கப்பல் போக்குவரத்து. ஆட்டோமொபைல் என அவரது மூளை பல தொழில்களில் முதல் பாதையைப் போட ஆரம்பித்தது.
தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஆழமான அறிவு அவருக்கு இருந்தது. அதை சுயமாக முயன்று கற்றார். அந்த அறிவைக் கொண்டு தொழில்துறையில் அதிநவீன தொழில்நுட்பத்தையும் பொறியியல் நிபுணத்துவத்தையும் கொண்டு வர முயன்றார். அந்த இலக்கை அடைவதற்காக, ஐரோப்பா, அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். தொழிற்சாலைகளைப் பார்வையிட்டார். முன்னணி பொறியாளர்களைத் தொழிலதிபர்களைச் சந்தித்தார். மும்பை மற்றும் புனேவை பிரிக்கும் சயாத்திரியில் ரயில்வே சுரங்கங்களை உருவாக்குவது இவரது நிறுவனமான வால்சந்த் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (WIL) இன் ஆரம்பக்கால திட்டங்களில் ஒன்றாக இருந்தது.
முதல் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம் மற்றும் முதல் கப்பல் கட்டும் தளம் உட்பட இந்தியாவில் பல பெரிய அளவிலான தொழில்களை அமைப்பதில் இவர் முன்னோடியாக இருந்தார். சர்க்கரை ஆலை, ஜவுளி தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், இரசாயன ஆலைகள் எனப் பலவற்றை நிறுவினார்.
இந்தியாவின் முதல் சுதேசி கப்பல் நிறுவனமான சிந்தியா ஷிப்யார்ட்டிற்கு (தேசியமயமாக்கப்பட்டபோது ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் என மறு பெயரிடப்பட்டது) அடித்தளத்தை அமைத்து தந்தார். கப்பல் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த தோஷிதான் மும்பையில் கப்பல் கட்டும் தளத்தை அமைத்தவர். இது இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்தது. இது இந்திய மற்றும் சர்வதேச கப்பல் வணிகத்திற்குப் பாதை உருவாக்கித் தந்தது.
இந்தியாவின் முதல் விமானத் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏர்கிராப்ட் லிமிடெட் (HAL) நிறுவியது இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவர் 1940 இல் ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்தை (இப்போது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) நிறுவினார். இது இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனமாகும். இது இந்திய விண்வெளித் துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது. இரண்டாம் உலகப் போரின்போது இந்திய விமானப்படைக்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்காற்றியது. இன்று, நாட்டின் விண்வெளித் துறையில் ஹெச்ஏஎல் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்தச் சாதனைகளால் இவர் 'இந்தியப் போக்குவரத்துத்துறையின் தந்தை' என்று புகழப்பட்டார். இவரது மற்றொரு பங்களிப்பு பிரிமியர் ஆட்டோமொபைல்ஸ். இது இந்தியாவின் முதல் உள்நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்திக்கு வழி ஏற்படுத்தி தந்தது. 1947 இல், இந்தியா சுதந்திரமடைந்தபோது, வால்சந்த் குழுமம் நாட்டின் பத்து பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.
சாங்லியில் உள்ள வால்சந்த் பொறியியல் கல்லூரி உட்படப் பல கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கு இவர் தனது சொத்தில் குறிப்பிடத்தக்கத் தொகையை நன்கொடையாக வழங்கினார். இது இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. கடின உழைப்பும், உறுதியும் இருந்தால் எந்த தடையையும் சமாளிக்க முடியும் என்பதற்கு வால்சந்த் ஹிராசந்த் தோஷியின் வாழ்க்கையே சாட்சி.












Click it and Unblock the Notifications