மகாராஷ்டிராவில் யார் முதல்வராக வேண்டும்! பாஜகவுக்கு ஷாக் தந்த எக்ஸிட் போல்! டாப்பில் யார் பாருங்க
மும்பை: மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இதற்கிடையே பல்வேறு செய்தி நிறுவனங்களும் இப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி இப்போது ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு வந்துள்ள பதில் ஆச்சரியம் அளிப்பதாகவே இருக்கிறது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு ஒரே கட்டமாக நவ. 20ம் தேதி தேர்தல் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்துடன் சேர்த்து மகாராஷ்டிராவிலும் வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்: தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், அங்கு இப்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பு நடத்திய எக்ஸிட் போலில் பாஜக கூட்டணி 178- 200 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்டாணி 82- 102 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
யார் முதல்வராக வர வேண்டும்: இதற்கிடையே இந்த ஆக்ஸிஸ் மை இந்தியா அமைப்பு நடத்திய எக்ஸிட் போல் சர்வேயில் முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதில் வந்துள்ள பதில் பலருக்கும் ஆச்சரியம் தருவதாகவே இருக்கிறது.
மகாராஷ்டிராவில் பாஜகவின் முகமாக இருப்பவர் தேவேந்திர ஃபட்னாவிஸ். 2014- 2019 வரை இவர் தான் மகாராஷ்டிர முதல்வராக இருந்துள்ளார். மகாராஷ்டிர வரலாற்றில் 5 ஆண்டுகள் முழுமையாக முதல்வர் பதவியில் இருந்த இரண்டாவது தலைவர் ஃபட்னாவிஸ் தான். பாஜக இந்த முறை பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்றால் ஃபட்னாவிஸ் தான் முதல்வர் பதவியை ஏற்பார் எனச் சொல்லப்படுகிறது.
டாப் 2ல் ஃபட்னாவிஸ் இல்லை: ஆனால், ஃபட்னாவிஸின் பெயர் டாப் 2 இடங்களில் இல்லை என்று ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 12% மக்கள் மட்டுமே ஃபட்னாவிஸ் முதல்வராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அவர் மூன்றாவது இடத்திலேயே இருக்கிறார்.
முதலிடத்தில் தற்போதைய முதல்வரும் ஷிண்டே சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார். அவர் முதல்வராக இருக்க வேண்டும் என்று சுமார் 31% பேர் சொல்லி இருப்பதாக ஆக்ஸிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்ரே இருக்கிறார். அவர் முதல்வராக இருக்க வேண்டும் என்று 18% பேர் தெரிவித்துள்ளனர்.
பாஜக கூட்டணி: பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அதிகபட்சமாக 31% ஆதரவு இருக்கிறது. தொடர்ந்து ஃபட்னாவிஸுக்கு 12% ஆதரவு இருக்கிறது. நிதின் கட்கரி, என்சிபியின் அஜித் பவாருக்கு தலா 2% ஆதரவு இருக்கிறது. இது தவிர பாஜகவில் இருந்து யாராவது முதல்வராக வேண்டும் என்று 5% பேர் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணி: காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை உத்தவ் தாக்ரேவுக்கு அதிகபட்சமாக 18% ஆதரவு இருக்கிறது. தொடர்ந்து சரத் பவாருக்கு 5%, நானா படோலேவுக்கு 2% ஆதரவு இருக்கிறது. காங்கிரஸின் பிருத்விராஜ் சவான், என்சிபி சரத் பவார் பிரிவின் ஜெயந்த் பாட்டீலுக்கு தலா 1% ஆதரவு இருக்கிறது. அதேபோல காங்கிரஸில் இருந்து யாராவது முதல்வராக வர வேண்டும் என்று 10% பேர் சொல்லியுள்ளனர்.
இந்த இரு கூட்டணியைத் தவிர விபிஏ பிரகாஷ் அம்பேத்கருக்கு 3% பேரும், ராஜ் தாக்ரேவுக்கு 2% பேரும் தரவு அளித்துள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications