என்ன இது.. நீங்க ஊழல் கட்சி என சொன்ன என்சிபியுடனே கூட்டணியா? பாஜகவுக்கு சரத்பவார் நறுக் கேள்வி
மும்பை: பாஜகவினரால் ஊழல்வாதிகள் கட்சி என முத்திரைகுத்தப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினருடன் இப்போது பாஜக கூட்டணி வைத்திருப்பது ஏன் என்று அக்கட்சியின் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து சரத்பவார் மற்றும் அஜித்பவார் கோஷ்டிகள் இன்று தங்கள் பலத்தை காட்டுவதற்காக தனித்தனியே ஆலோசனை கூட்டங்களை நடத்தின.

சரத்பவார் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் 13 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்; ஆனால் அஜித்பவார் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் 30 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆதரவாளர்களிடையே சரத்பவார் பேசியதாவது: இன்றைக்கு ஒட்டுமொத்த நாடும் நம்மை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய கூட்டம் தேசியவாத காங்கிரஸ் கட்சி வரலாற்றில் மிக முக்கியமானதாகும். நம் முன்பாக எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையையும் உடைத்து தகர்த்து எறிந்துவிட்டு முன்னேறுவோம். எங்களுக்கு அதிகாரப் பசி எதுவும் இல்லை. நாங்கள் மக்களுக்கு பணியாற்றத்தான் இருக்கிறோம். தொடர்ந்து மக்கள் பணி செய்வோம்.

அஜித்பவார் தமக்கு ஏதாவது சிக்கல் இருந்திருந்தால் என்னிடம் கலந்து பேசியிருக்க வேண்டும். அஜித்பவார் தன் மனதில் என்ன இருக்கிறது என்பதையாவது என்னிடம் சொல்லி இருக்க வேண்டும்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு ஊழல் கட்சி என குற்றம்சாட்டியது பாஜகதான். இன்று அதே பாஜகதான் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.. அது எப்படி? அன்று உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு என்ன நடந்ததோ அதேதான் திரும்பவும் இப்போது நமக்கு நிகழ்ந்திருக்கிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சின்னமும் எங்கேயும் போய்விடாது; நம்மிடம்தான் இருக்கும். அதனைப்பற்றி கவலைப்பட வேண்டாம். மகாராஷ்டிரா மக்கள் நம்மை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு சரத்பவார் கூறினார்.
#WATCH | "Disrespect us, but not our father (Sharad Pawar). This fight is against the BJP government. BJP is the most corrupt party in the country," says NCP Working President Supriya Sule, in Mumbai. pic.twitter.com/BxrUYpU6WI
— ANI (@ANI) July 5, 2023
இந்தக் கூட்டத்தில் சரத்பவாரின் மகளும் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவருமான சுப்ரியா சுலே பேசியதாவது: அஜித்பவார் இன்று பேசும் போது சரத்பவாரின் 83 வயது பற்றி பேசி இருக்கிறார். அமிதாப்பச்சனுக்கு கூட 82 வயதாகிறது. அவர் பணியாற்றி கொண்டிருக்கிறார். எங்களை நீங்கள் அவமதிக்கலாம். ஆனால் சரத்பவாரை அவமரியாதை செய்வதை பொறுத்து கொள்ள முடியாது.
இந்த நாட்டிலேயே மிக மோசமான ஊழல் கட்சியான பாஜகவை எதிர்த்து எங்கள் போராட்டம் தொடரும். ஒரிஜினல் என்சிபியும் சின்னமும் சரத்பவாரிடமே இருக்கும். இவ்வாறு சுப்ரியா சுலே பேசினார்.












Click it and Unblock the Notifications