தற்கொலை செய்துவிடுவதாக மிரட்டிய மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து.. ஐகோர்ட் தீர்ப்பின் விவரம்
மும்பை: தற்கொலை செய்துவிடுவதாக அடிக்கடி மிரட்டிய மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பல கணவன் மனைவிக்கு பாடமாக இருக்க போகிறது. ஏன் இந்த தீர்ப்பு இன்றைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். அதேபோல் வழக்கின் விவரங்களை தெளிவாக பார்ப்போம்.
இன்றைய சூழலில் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடுகள் சர்வ சாதாரணமாக வருகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 100க்கு மேற்பட்ட விவகாரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது ஒவ்வொரு 14 நிமிடத்திற்கு ஒருவர் விவகாரத்து கேட்டு நீதிமன்றதை நாடுவதாக கூறப்படுகிறது. எனினும் சரியான புள்ளி விவரம் என்பது இல்லை..

பொதுவாக இந்தியாவின் திருமண கலாச்சாரத்தில் விவகாரத்து என்பது எந்த மதமாக இருந்தாலும் மிகப்பெரிய முடிவு. அவ்வளவு எளிதில் எடுக்க மாட்டார்கள். இதனால் திருமணங்கள் எல்லாமே விவாகரத்தில் முடிவது இல்லை. ஒரு சதவீதம் முதல் 2 சதவீதத்திற்குள் தான் விவகாரத்து வழக்குகள் இந்தியாவில் தொடரப்படுகின்றன. அதுவும் இந்தியாவின் பெரு நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், அஹமதாபாத், புனே உள்ளிட்ட மெட்ரோ நரகங்களில் தான் அதிகம் இருக்கிறது.
விவகாரத்திற்கு பல்வேறு காரணங்களை பட்டியலிட முடியும். பரஸ்பரம் விவகாரத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. அதேநேரம் ஒருவர் மட்டும் என்றால், சந்தேகப்படுவது, கள்ளத்தொடர்பு, டார்ச்சர், தாம்பத்தியத்தை விரும்பாதது போன்றவற்றை காரணமாக கூற முடியும். இந்நிலையில் தற்கொலை செய்துவிடுவதாக மிரட்டிய மனைவியிடம் இருந்து கணவருக்கு கிடைத்துள்ளது. எப்படி என்பதை பார்ப்போம்.
மகாராஷ்டிராவில் குடும்ப நலக்கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட ஒருவரின் மனு மகாராஷ்டிராவில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கணவர் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "நான் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். ஆனால் கருத்து முரண்பாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நானும், எனது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனது மனைவி தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி மிரட்டல் விடுத்தார். எனவே மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நலக்கோர்ட்டில் மனு செய்தேன். ஆனால் எனது மனுவை குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்து திருமண சட்டத்தின்படி பிரிந்து செல்வது, சந்தேகம், மிரட்டல், தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற காரணங்களுக்காக விவாகரத்து பெற முடியும். அதன் அடிப்படையில் எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில் மனைவியிடம் இருந்து கணவருக்கு அதிரடியாக விவாகரத்து வழங்கியது. நீதிபதிகள் தீர்ப்பில் கூறுகையில், "தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு இடையே ஒரு இணக்கமான தீர்வு அல்லது சமரசம் ஏற்பட எந்த சாத்தியமும் இல்லை. மனுதாரர் தனக்கு நேர்ந்த பல கொடுமையான சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால் குடும்பநல நீதிமன்றம அவற்றை கருத்தில் கொள்ளவில்லை.
குடும்ப உறவில் ஒரு துணைவரின் தற்கொலை மிரட்டல் என்பது மற்றொருவரை சித்ரவதை செய்வதற்கு சமமாகும். இதை உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்த்தைகள், சைகைகள் அல்லது அசைவுகள் மூலம் இதுபோன்ற மிரட்டல் மீண்டும் மீண்டும் விடுக்கப்படும்போது, துணைவரால் அமைதியான சூழலில் கல்யாண உறவில் தொடர இயலாது.
அத்தகைய திருமண உறவை தொடர வலியுறுத்துவது, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கொடுமையை அனுபவிக்க கூறுவதுபோல் ஆகிவிடும். எனவே இந்த வழக்கில் கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. மேலும் வழக்கில் இறுதி தீர்வுக்காக அவர் மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும். மேலும் 2 வீடுகளின் உரிமையை அந்த பெண்ணுக்கு மாற்ற வேண்டும்" இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications