64 ஆண்டுகளில் 20 சிஎம்கள்! ஆனா முழுசா தாக்குப்பிடித்தது இரண்டே பேர் தான்! இதுதான் மகாராஷ்டிர அரசியல்
மும்பை: நாட்டின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் சில வாரங்களில் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு அங்குள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதேநேரம் மகாராஷ்டிரா உருவாக்கப்பட்ட பிறகு, கடந்த 64 ஆண்டுகளில் வெறும் இரண்டு தலைவர்கள் மட்டுமே முழுமையாக 5 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா. ஜிடிபி அடிப்படையில் நாட்டின் முன்னணி மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது.

மகாராஷ்டிரா: மேலும், லோக்சபாவில் உத்தரப் பிரதேசத்திற்குப் பிறகு அதிகபட்சமாக 48 எம்பிக்கள் மகாராஷ்டிராவில் இருந்தே செல்கிறார்கள். இப்படி பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கிய மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. இந்தளவுக்கு முக்கிய மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் இந்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
1960ம் ஆண்டு மகாராஷ்டிரா உருவாக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு அங்கு மொத்தம் 14 சட்டசபைத் தேர்தல்கள் நடந்துள்ளது. 20 பேர் முதல்வர் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், வெறும் இரண்டே இரண்டு பேர் மட்டுமே முழுமையாக 5 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் கடந்த 64 ஆண்டுகளில் இரண்டு பேர் மட்டுமே முழுமையாக 5 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மாநிலம்: பம்பாய் மாகாணம் கடந்த 1960ல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் என்று இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது தொடங்கி சுமார் 30 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்தது. அப்போது யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வானார். இருப்பினும் சுமார் 2 ஆண்டுகள் மட்டுமே அவர் முதல்வரா இருந்தார். 1962 இந்தியச் சீனப் போர் சமயத்தில் அவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து மரோத்ராவ் கண்ணம்வார் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
நீண்ட காலம் முதல்வராக இருந்தவர்: இருப்பினும், அவர் அடுத்தாண்டே உயிரிழந்த நிலையில், 1963ல் வசந்தராவ் நாயக் முதல்வராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1967 மற்றும் 1972 தேர்தல்களில் வென்று வசந்தராவ் நாயக் முதல்வராகத் தொடர்ந்தார். 1975ல் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட போது வசந்தராவ் நாயக் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், இப்போது வரை வசந்தராவ் நாயக் தான் மகாராஷ்டிராவில் நீண்ட காலம் அதாவது 11 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார்.
இடையில் அப்போது காங்கிரஸின் இளம் தலைவரா இருந்த சரத் பவார், காங்கிரஸில் இருந்து 68 எம்எல்ஏக்களை தன்னுடன் அழைத்துச் சென்று இந்தியா தேசிய காங்கிரஸ் (சோஸியலிஸ்ட்) என்ற கட்சியைத் தொடங்கினார். இந்திரா காந்தி மகாராஷ்டிராவுக்கு மராத்தியர்களை முதல்வராக நியமிக்கவில்லை என்பதே குற்றஞ்சாட்டி அவர் புதிய கட்சியைத் தொடங்கினார். ஜனதா மற்றும் ஒர்கர் பார்டி ஆஃப் இந்தியா உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் வெறும் 38 வயதில் முதல்வரானார். இதன் மூலம் மாநிலத்தின் இளம்வயது முதல்வர் என்ற சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார்.
குழப்பம்: சரத் பவார் ஆட்சி அங்கு நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது. இருப்பினும், 1980ல் மத்தியில் இந்திரா காந்தி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில், அவர் உடனடியாக மகாராஷ்டிராவில் மாநில அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். அதன் பிறகு நடந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு பல முதல்வர்கள் இருந்தாலும், யாரும் முழுமையாக 5 ஆண்டுகள் முதல்வர் பதவியில் நீடிக்கவில்லை.
1995இல் முதல் முறையாக மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பாஜக- சிவசேனா இணைந்து ஆட்சியைப் பிடித்த நிலையில், மனோகர் ஜோஷி முதல்வராகத் தேர்வானார். அவர் சுமார் 4 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்த நிலையில், 1999இல் அவர் நீக்கப்பட்டு பால் தாக்ரே ஆதரவாளரான நாராயண் ரானே முதல்வராக நியமிக்கப்பட்டார்.
தேஷ்முக்: விலாஸ்ராவ் தேஷ்முக் இரண்டு முறை முதல்வராக இருந்த நிலையில், இரு முறையும் 5 ஆண்டுகள் நிறைவு செய்ய முடியவில்லை. முதல்முறை மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி சமாளிக்கத் தேர்தலுக்கு ஓராண்டு இருந்த போதே 2003இல் அவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தலித் தலைவரான சுஷில்குமார் ஷிண்டே முதல்வராக நியமிக்கப்பட்டார். 2004 தேர்தல் வென்ற பிறகு விலாஸ்ராவ் தேஷ்முக் மீண்டும் முதல்வரான போதிலும், மும்பை தாக்குதலைத் தொடர்ந்து 2008இல் அவர் பதவி விலகினார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ்: அதைத் தொடர்ந்து 2014இல் பாஜக 122 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து சிவசேனா உடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார். 2014 முதல் 2019 வரை ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியில் தொடர்ந்தார். இதன் மூலம் அங்கு 5 ஆண்டுகள் முதல்வராகத் தொடர்ந்த இரண்டாவது தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
இருப்பினும், 2019இல் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அஜித் பவார் கூட்டணியில் திடீரென ஒரு நாள் காலை தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். இருப்பினும், யாருக்கும் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் அவர் 3 நாட்களில் பதவி விலகினார். இதன் மூலம் குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையும் அவர் வசமே இருக்கிறது.












Click it and Unblock the Notifications