அடப்பாவமே இப்படி ஆகிடுச்சே.. நடுரோட்டில் ஓட்டம்! திடீரென ஆட்டோவில் ஏறிய பென்ஸ் சிஇஓ! என்னாச்சு
மும்பை: இந்தியாவில் மிகப் பெரிய சொகுசு கார் நிறுவனமான பென்ஸ் சிஇஓ திடீரென ஆட்டோ ஏறிப் பயணித்து உள்ளார்.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் எவ்வித அசவுகரியமும் இல்லாமல் தங்களுக்குப் பிடித்தது போலப் பயணிக்க வேண்டும் என்று நினைப்பதே இதற்குக் காரணம்.
அதிலும் குறிப்பாகச் சொகுசு கார்களின் விற்பனை என்பது நாட்டில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கொரோனா காலத்தில் கூட, மற்ற மாடல்கள் திணறும் போதிலும் முதலில் மீண்டது என்னவோ சொகுசு கார்கள் தான்.
3 அடி நீளம்.. 2 அடி உயரம்.. மாலை அல்ல! காலணியை காணிக்கையாக வழங்கும் கிராம மக்கள்.. விசித்திர வழிபாடு
பென்ஸ்
இந்தியாவில் உள்ள முக்கியமான சொகுசு கார்களில் ஒன்று பென்ஸ்.. சுமார் 50 லட்சத்தில் தொடங்கி 2 கோடி வரை பென்ஸ் காரில் பல்வேறு உயர் ரக கார்கள் உள்ளன. ஜெர்மனியை சேர்ந்த பென்ஸ் நிறுவனம் இந்தியாவைத் தனது முக்கிய சந்தைகளில் ஒன்றாகப் பார்க்கிறது. இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பென்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மார்ட்டின் ஷ்வெங்க்
இந்தியாவில் பென்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் மார்ட்டின் ஷ்வெங்க் என்பவர் தான் கவனித்து வருகிறார். பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஆன இவர், சமீபத்தில் புனேவில் சாலைகளில் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தார். சூட், ஷூ என பக்காவாக இருந்த மார்ட்டின் ஷ்வெங்க் இப்படிப் பரபரப்புடன் நடப்பதைப் பார்த்தால் வாங்கிங் செல்வது போல யாருக்கும் தெரியவில்லை. பரபரப்புடன் வந்து அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி உள்ளார்.
டிராபிக்
கோட் சூட், ஷூ என பக்காவாக இருந்த மார்ட்டின் ஷ்வெங்க் தனது ஆட்டோவில் ஏறியதைப் பார்த்தும் டிரைவருக்கு முதலில் புரியவில்லை. இருப்பினும், விளக்க நேரமில்லாததால் மார்ட்டின் ஷ்வெங்க் எங்குச் செல்ல வேண்டும் என்பதை மட்டும் கூறிவிட்டு அமர்ந்துவிட்டார். அப்படி என்ன தான் நடந்தது எனக் கேட்கிறீர்களா! அன்றைய தினம் 'மேட் இன் இந்தியா' ஆடம்பர காரான அதாவது மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூஎஸ் 580 அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1.5 கோடி கார்
இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சிக்குக் கலந்து கொள்ள விறுவிறுப்பாகக் கிளம்பிக் கொண்டு இருந்தார் மார்ட்டின் ஷ்வெங்க். இருப்பினும், அவர் புனே டிராபிக் குறித்து அறிந்து இருக்கவில்லை போல.. டிராபிக்கில் மாட்டிக் கொண்டதால் சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தனது 1.5 கோடி பென்ஸ் காரை நடுவழியில் நிறுத்துவிட்டு, நடந்தே சில கிலோமீட்டர் சென்று உள்ளார். அதன் பிறகு தான் ஆட்டோ ஏறி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குப் பறந்து இருந்தார்.
ஆட்டோ பயணம்
இது தொடர்பான படத்தைப் பகிர்ந்த மார்ட்டின் ஷ்வெங்க், "உங்கள் எஸ்- கிளாஸ் கார் புனே சாலைகளில் நெரிசலில் சிக்கிக்கொண்டால் - நீங்கள் என்ன செய்வீர்கள்? காரில் இருந்து இறங்கி, சில கிலோமீட்டர்கள் நடக்கத் தொடங்குவீர்கள்.. பின்னர் ஆட்டோவை பிடிப்பது தான் ஒரே வழி!" என்று அவர் பதிவிட்டு உள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாகப் பரவியது. பலரும் நிகழ்ச்சி தாமதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஆட்டோ ஏறிச் சென்ற மார்ட்டின் ஷ்வெங்க்வை பாராட்டி வருகின்றனர்.
உற்பத்தி
இதைத் தொடர்ந்து அந்த கார் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பென்ஸ் ஈக்யூஎஸ் 580 கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "அடுத்த 8-10 ஆண்டுகளில் பல மின்சார கார்களை நாங்கள் வெளியிட உள்ளோம். இப்போது இந்தியாவில் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். விற்பனை அதிகரிக்க முயன்று வருகிறோம். ஒரு காரை ஒரு இடத்தில் விற்க வேண்டும் என்றால் அங்கு 1.50 லட்சம் முதல் 2 லட்சம் கார்கள் விற்பனை ஆக வேண்டும்" என்றார்.
இந்தியாவில் விற்பனை
இந்தியாவிலேயே மிகப் பெரிய சொகுசு கார் நிறுவனமாக பென்ஸ் உள்ளது. இந்தியாவில் பெரிய நிறுவனமாக இருந்தாலும் கூட, மார்ட்டின் ஷ்வெங்க் சொல்லும் அளவுக்கு நமது நாட்டில் பென்ஸ் விற்பனையாக இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். கடந்த 2021இல் பென்ஸ் 11,242 கார்களை விற்றது. முன்னதாக 2018இல் அதிகபட்சமாக 15,500 கார்கள் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.