மும்பையில் காதலியுடன் உல்லாசம்.. விழுப்புரத்தில் வேறு பெண்ணுடன் டும் டும்! சிக்கிய பேஸ்புக் ‛ரோமியோ’
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவனை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி சேர்ந்து வாழ்ந்துவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசுதோஷ் ஷிண்டே. 26 வயதான இளைஞருக்கும் மும்பையை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும் இடையே கடந்த 2019ம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் இந்த பழக்கம் நட்பாக இருந்த நிலையில், பின்னர் காதலாக பரிணமித்தது. ஆனால் இந்த பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. குழந்தையை அந்த பெண் அசுதோஷ் ஷிண்டேவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இப்படி இருக்கையில் இவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக வளர்ந்திருக்கிறது. ஷிண்டே தனது காதலை கூறியிருக்கிறார். ஆனால் குடும்பம் குறித்தும், தனது மகள் குறித்தும் அப்பெண்ணுக்கு பயம் இருந்திருக்கிறது. இது குறித்து அசுதோஷ் ஷிண்டேவிடம் பேசுகையில், "நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று ஷிண்டே உறுதியளித்திருக்கிறார். இதனையடுத்து ஷிண்டேவின் காதலுக்கு அப்பெண் ஓகே சொல்ல இருவரும் காதலித்துள்ளனர்.

காதல்
காதல் இப்படியே நீடித்து வர திருமணம் குறித்து அப்பெண் கேள்வியெழுப்பியிருக்கிறார். தான் நிச்சயம் திருமணம் செய்துகொள்வதாகவும், குழந்தையையும் பார்த்துக்கொள்வதாகவும் ஷிண்டே நம்பிக்கையளிக்க இருவரும் சேர்ந்து மும்பையில் 'கஃப் பரேட்' பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில்தான் ஷிண்டேவின் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்க்க தொடங்கியுள்ளனர். இந்த விஷயம் காதலிக்கு தெரிய வந்திருக்கிறது. எனவே உடனடியாக திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், ஷிண்டே ஏதேதோ காரணம் சொல்லி திருமணத்தை தள்ளி போட்டிருக்கிறார்.

தாலி
மறுபுறம் ஷிண்டேவின் வீட்டில் பெண் பாரக்கும் படலம் தீவிரமடைந்துள்ளது. இந்த தேடலில் ஷிண்டேவின் குடும்பத்திற்கு ஏற்றார்போல் பெண் கிடைத்துள்ளது. இந்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள சொல்லி வீட்டில் வற்புறுத்தியுள்ளனர். இந்த விஷயம் ஷிண்டேவின் காதலிக்கு தெரிய வந்த நிலையில், தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஷிண்டே வேறு வழியின்றி காதலிக்கு தாலி கட்டி, நெற்றியில் குங்குமமிட்டுள்ளார். இருவரும் சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ஊரில் உறவினருக்கு உடல் நலம் சரியில்லை என்று சொல்லி ஷிண்டே தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

புகார்
இங்கு வந்த பின்னர் அவர் மீண்டும் மும்பை செல்லவேயில்லை. ஓரிரு நாட்களில் திரும்புவதாக சொன்ன ஷிண்டே ஒரு மாதம் ஆகியும் திரும்பாத நிலையில் அவரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்கிறார் அவருடைய மும்பை காதலி. "இனி நான் மும்பை வர முடியாது, எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் ஏற்றார் போல் இங்கேயே ஒரு பெண் பார்த்திருக்கிறார்கள், எனவே என்னை மறந்துவிடு" என்று ஷிண்டே கூறியுள்ளார். இதை கேட்டு அவரது காதலி அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு திருமணம் செய்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிடுவேன் என்று ஷிண்டேவின் காதலி எச்சரிக்க, ஷிண்டை அதனை காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை.

கைது
இதனையடுத்து மும்பை காதலி கஃப் பரேட் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "நானும் ஷிண்டேவும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி பின்னர் காதலர்களானோம். அவர் திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் தற்போது வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஷிண்டேவை மும்பை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். ஆனால் கைது நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னர் ஷிண்டேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இருப்பினும் திருமணம் நடந்த 2 நாட்களில் அவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications