விபத்தில் சிக்கிய நடிகர் கார்த்தி! ரத்து செய்யப்பட்ட சர்தார் 2 ஷூட்டிங்.. திடீர் பரபரப்பு! என்னாச்சு?
மைசூர்: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்த கார்த்திக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட திடீர் காயத்தால் அவரது சர்தார் 2 ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கார்த்திக்கு என்ன நடந்தது.. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது.. அவரது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் ஒரு சில நடிகர்களில் கார்த்தி முக்கியமானவர். பருத்திவீரன் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், கைதி என இவர் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையில் தனித்து நிற்கும்.

சர்தார் 2
இவரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் 'சர்தார்'. பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்த இந்த படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா எனப் பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். அப்பா- மகன் என கார்த்தி இரு வேடங்களில் நடித்திருந்த சூழலில், இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
உளவாளியான கார்த்தி ஒரு கட்டத்தில் தேசத்துரோகி என்று முத்திரையிடப்படுகிறார். இருப்பினும், அவர் தேச நலனுக்காக எந்தளவுக்கு முக்கியமான தியாகத்தைச் செய்தார் என்பதே இந்த படத்தின் கதையாகும். முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அப்போதே இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இரண்டாம் பாகத்தில் எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நடிகர் கார்த்திக்கு காயம்
மக்களிடையே சர்தார் 2 படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஷூட்டிங்கும் கூட பரபரப்பாக நடந்து வந்தது. பல்வேறு மாநிலங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வந்தது. அதன்படி தற்போது மைசூரில் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது திடீரென நடிகர் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
காலில் வீக்கம் இருந்த நிலையில், கார்த்தி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒரு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவும் சென்னை திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்து என்ன
இந்தாண்டு இறுதிக்குள் சர்தார் 2 படத்தைத் திரைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் கார்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி படத்தைத் திரைக்குக் கொண்டு வர முடியுமா எனக் கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், சிறு காயம் என்பதால் சில நாள் ஓய்வுக்குப் பிறகு படப்பிடிப்பு வழக்கம் போலத் தொடரும் என்றே கூறப்படுகிறது.
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்து அவர் நடிப்பில் வா வாத்தியார் படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications