ஏம்ப்பா, அது யானை.. குழந்தை கிடையாது.. மைசூரில் ஜஸ்ட் மிஸ்.. தப்பிய மொத்த குடும்பம்!
மைசூர்: கர்நாடகாவில் ஜீப்பில் சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தினர் ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, யானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வந்து மனிதர்களை கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்காக நாம் வனவிலங்குகளை குறைக்கூற முடியாது. ஊரை விரிவுப்படுத்துகிறோம், சாலை போடுகிறோம் என்ற பெயரில் யானை, புலி போன்ற வன விலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்களாகிய நாம் ஆக்கிரமித்து விடுகிறோம். அப்படி ஆக்கிரமிக்கும் போது, அந்த விலங்குகளுக்கு தேவையான உணவும், குடிநீரும் போதிய அளவு கிடைப்பதில்லை. இதனால்தான், உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அவை ஊருக்குள் வருகின்றன. இதுபோன்ற சமயங்களிலேயே, மனிதர்களும் சில நேரங்களில் அவற்றுக்கு இரையாகி விடுகின்றனர்.

எத்தனை முறை கூறினாலும் பயனில்லை
அதேபோல, வனப்பகுதிகள் அருகே சுற்றுலா செல்லும் பயணிகளை, காடுகளை ஒட்டி செல்ல வேண்டாம் என அராசங்கம் எத்தனை முறை கூறினாலும் அதை அவர்கள் கேட்பதில்லை. இதுவும் வனவிலங்குகளால் அவர்கள் தாக்கப்பட்டு உயிரிழப்பதற்கு முக்கிய காரணமாகி விடுகிறது. தற்போது இதுபோன்ற அசம்பாவிதத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடிய சம்பவம்தான் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கபினிக்கு சென்ற குடும்பத்தினர்
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ளது கபினி பகுதி. கர்நாடகா - கேரள எல்லையில் வனங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த இடம் பிரபல சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கபினி பகுதிக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கு ஜீப்பை வாடகைக்கு எடுத்த அவர்கள், அங்குள்ள வனப்பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தனர்.

துரத்திய காட்டு யானை
அப்போது அங்கிருந்த மரங்களுக்கு இடையே மறைந்திருந்த பெரிய ஆண் காட்டு யானை ஒன்று, அந்த ஜீப்பின் முன்னால் வந்து நின்றது. இதை பார்த்த அவர்கள் பயத்தில் அலறியுள்ளனர். அவர்கள் அலறல் சத்தத்தை கேட்டதும் ஆக்ரோஷமான காட்டு யானை ஜீப்பை துரத்த தொடங்கியது. யானை முன்னால் இருப்பதால் டிரைவரால் ஜீப்பை உடனடியாக திருப்ப முடியவில்லை. எனினும், மிக சாதுரியமாக ரிவர்ஸ் கியர் போட்டு ஜீப்பை பின்னால் வேகமாக கொண்டு சென்றார் டிரைவர். ஆனால் காட்டு யானை விடாமல் கோபத்தில் பிளிறிய படியே ஜீப்பை துரத்தியது. ஒருகட்டத்தில் ஜீப்புக்கு மிக நெருக்கமாவே யானை வந்தது. ஆனால் சற்றும் பிசகாமல் ஜீப்பை சாமர்த்தியமாக பின்னால் ஓட்டிச் சென்றார் அந்த டிரைவர்.

வீடியோ வைரல்
அடர்ந்த வனப்பகுதியில் இருந்து ஜீப் வெளியே சென்றதும் யானை துரத்துவதை நிறுத்திவிட்டு காட்டுக்குள் சென்றுவிட்டது.
இதனை ஜீப்பில் இருந்த ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை வீடியோவை பார்த்ததற்கே பலருக்கு வயிற்றில் புளியை கரைத்துவிட்டது. அப்படி இருக்கும் போது, நேருக்கு நேர் அருகாமையில் காட்டு யானையும் பார்த்தும் கூட, பதட்டம் அடையாமல் ஜீப்பை செலுத்திய டிரைவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications