மணிப்பூர் பிரச்னை பத்தி எல்லாம் எப்ப பேசுவீங்க.. மோடிக்கு, சித்தராமையா நெத்தியடி பதில்
மைசூர்: கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா நில மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி புகார் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சித்தராமையா, "பாஜகவிலும் ஏராளமான நிர்வாகிகள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. முதலில் அந்தப் பிரச்சனையை சரி செய்யுங்கள்." என்று பதிலடி கொடுத்துள்ளார். இது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்று ஒரு வருடம் தான் ஆகிறது. அதற்குள் அவரின் பதவி இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. சித்தராமையா மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதனிடையே மைசூர் நகர மேம்பாட்டு வாரியமான 'முடா' (MUDA) மூலம் சித்தராமையா மனைவி பார்வதி பெயரில் 14 வீட்டு மனைகள் சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து சித்தராமையா மீது புகார் வைக்கப்பட்டது. கர்நாடகா மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முடா முறைகேடு தொடர்பாக சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இது சித்தராமையாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை பாய உள்ளது. முதலமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளது, கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் எழுந்தது.
இதுகுறித்து ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய சொல்லி, சித்தராமையா கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து சித்தராமையா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சித்தராமையாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக உள்ளிட்ட கட்சிகள் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற பிரதமர் நரேந்திர மோடியும் சித்தராமையா குறித்து விமர்சித்தார். அப்போது மோடி, "காங்கிரஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஊழல் அதிகம் நடைபெறும். இந்தியாவில் ஊழலின் ஊற்றுக் கண்ணே காங்கிரஸ் கட்சி தான். ஹரியானா மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் கொள்ளையடித்துள்ளனர். நில மோசடி வழக்கில் கர்நாடகா முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள சித்தராமையா, "பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து ஏன் எப்போதும் வாய் திறப்பதில்லை. அவர் ஏன் இன்னும் மணிப்பூர் செல்லவில்லை. பாஜகவில் நிறைய ஊழல்வாதிகள் உள்ளனர். மோடி முதலில் அவரின் கட்சியில் உள்ள ஊழல்களை சரி செய்யட்டும். ஹிண்டன்பர்க் ரிப்போர்ட் குறித்து மோடி வாய் திறக்காதது ஏன். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் இல்லை." என்று கூறினார்.
மத்திய அமைச்சர் குமாரசாமி வைத்த புகார்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சித்தராமையா, "குமாரசாமி எப்போதும் பொய் மட்டுமே பேசுவார். அதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது." என்றார். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏவும், சீனியர் வழக்கறிஞருமான பொன்னன்னாவுடன் சித்தராமையா ஆலோசனையில் ஈடுபட்டார். இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், "பொன்னன்னா என் சட்ட ஆலோசகர். அவருடன் நான் எப்போதும் ஆலோசனை செய்வேன். அவர் தனது தொகுதிக்கு செல்லும் வழியில் என்னை சந்தித்து சென்றுள்ளார். அவ்வளவுதான்." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications