14 பொதுமக்கள் சுட்டுக் கொலை- நாகாலாந்தில் கொந்தளிப்பு-ராணுவ முகாம் தீக்கிரை- இன்று பந்த்!
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என சந்தேகித்து பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் கொந்தளித்த பொதுமக்கள் ராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைக்கு சொந்தமான முகாமை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இன்று நாகாலாந்தின் சில பகுதிகளில் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தின் மோன் மாவட்டம், மியான்மர் எல்லையில் உள்ளது. இப்பகுதியில் கோன்யாக் என்கிற நாகா இன பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

14 பேர் படுகொலை
மியான்மர் எல்லை அருகே இருப்பதால் நாகா தீவிரவாதிகள், உல்பா தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதி இது. இங்கு சனிக்கிழமை மாலை 14 நிலக்கரி சுரங்க தொழிலாளர்களை தீவிரவாதிகள் என சந்தேகித்து ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். சுரங்க தொழிலாளர்கள் வீடு திரும்பும் போது படுகொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாகாலாந்தில் இப்படுகொலை சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவத்தினர் மீது தாக்குதல்
14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு, ராணுவத்தினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஜவான் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். ராணுவ வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக நாகாலாந்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ராணுவமும் இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்திருக்கிறது.

ராணுவ முகாம் தீக்கிரை
இந்நிலையில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு மோன் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரின் முகாமை சூறையாடி தீ வைத்து எரித்தனர். ராணுவத்தினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அருகே உள்ள துயென்சங் மாவட்டத்துக்கும் பரவியது. அப்பகுதியில் சில கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் மோகோக்சங் மாவட்டத்தில் இன்று முழு அடைப்புக்கு ஏயோ (A0) நாகா பழங்குடிகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கடும் கண்டனம்
14 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு நாகாலாந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாகா மாணவர் முன்னணி, நாகா ஹோஹோ, குக்கி மாணவர் அமைப்பு, சுமி ஹோஹோ உள்ளிட்ட அமைப்புகள் இப்படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ளன. நாகாலாந்தில் ஆளும் என்.டி.பி.பி. கட்சியும் இப்படுகொலை சம்பவத்தை கண்டித்துள்ளது. நிராயுதபாணிகளாக தங்களது கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அப்பாவி தொழிலாளர்களை ராணுவம் படுகொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என அந்த கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்து முன்னாள் முதல்வர் டிஆர் ஜெலியாங் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய ராணுவத்தினரே அவர்களை காரணமே இல்லாமல் சுட்டுக் கொலை செய்ததை எந்த வகையிலும் ஏற்க முடியாது என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications