பாஜகவினர் வைத்த வெடியால் வீடுகள் எரிந்து நாசமான விவகாரம்.. நாகை வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு!
நாகை: நாகை அருகே பாஜகவினர் வெடி வைத்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பாஜக நாகை லோக்சபா தொகுதி வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நாகை தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று நாகப்பட்டினம் - நாகூர் பிரதான சாலையில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தார்.

அந்த வகையில் காடம்பாடி பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷுக்கு, அப்பகுதி பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடித்து வேட்பாளரை வரவேற்ற போது, வெடித்துச் சிதறிய பட்டாசுகள், சாலையோரம் இருந்த குடிசை வீட்டின் கூரையின் மேல் விழுந்தது.
பக்கிரிசாமி என்பவரின் குடிசை வீட்டு கூரையில் விழுந்த பட்டாசு தீப்பொறி மளமளவென பரவி வீட்டின் கூரை முழுவதும் எரிந்தது. மேலும் அருகில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் கூரையின் மீதும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இரண்டு வீடுகளும் முழுவதுமாக எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து போனது. இதற்கிடையே, தாங்கள் வெடி வைத்ததால் தீ பற்றியதை கண்டும் காணாமல் பாஜகவினர் அங்கிருந்து நழுவிச் சென்றதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தித்தத் ஆறுதல் கூறி தற்காலிக நிவாரணம் வழங்கினார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பிரச்சாரத்தின் போது வெடி வெடித்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பா.ஜகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் வீரமணி அளித்த புகாரின் பேரில், நாகை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் மீது வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.












Click it and Unblock the Notifications