வேளாங்கண்ணியில் சலசலப்பு! போகுற இடமெல்லாம் TVK கோஷம்.. யாராவது சொல்லி நிறுத்துங்களேன்!
நாகப்பட்டினம்: விஜய் ரசிகர்கள், தாங்கள் போகும் இடமெல்லாம் TVK என கோஷம் போட்டிருப்பது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக வேளாங்கண்ணி தேவாலயத்தில் TVK கோஷம் போட்டதால் திருப்பலி பாதிக்கப்பட்டிருக்கிறது.
எல்லோருக்கும் ஏதோ ஒன்றின் மீது பிடிப்பு இருக்கத்தான் செய்யும். சிலருக்கு கிரிக்கெட் பிடிக்கலாம், கொஞ்சம் பேருக்கு கால்பந்து பிடிக்கும், இன்னும் சிலர் ரசிக வெறியர்களாக இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் மைதானத்திலும், தியேட்டரிலும் வெளிப்படுத்தினாலே போதுமானது.

இருப்பினும் விஜய் ரசிகர்களின் சமீபத்திய செயல்கள் கொஞ்சம் எல்லை மீறி போய்க்கொண்டிருப்பதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இரு நாட்களுக்கு முன்னர் கள்ளழகர் திருவிழாவில், தவெக கொடியை தூக்கி பிடித்து, TVK கோஷம் போட்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். கள்ளழகர் நேரில் வந்திருந்தால்.. "யாராச்சும் சொல்லி நிறுத்துங்களேன்" என புலம்பி தள்ளியிருப்பார். அந்த அளவுக்கு ஆட்டம் போட்டிருந்தனர் விஜய் ரசிகர்கள்.
ஒவ்வொரு வருசமும் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். ஆனால், அந்த திருவிழாவில் திமுகவோ, அதிமுகவோ, நாம் தமிழரோ, அல்லது இன்னும் வேறு சில கட்சிக்காரர்களோ தங்கள் கொடியை கொண்டுபோய் காட்டி.. விளம்பரம் தேடிக்கொண்டது இல்லை. வரலாற்றில் முதல் முறையாக மதம் சார்ந்த விழாவில் அரசியல் கட்சிக் கொடி உள்ளே வந்திருக்கிறது. சரி ஏதோ இளைஞர்கள் ஒரு வேகத்தில் இதை செய்துவிட்டார்கள் என்று கடந்து போக முயன்றால்.. கொடைக்கானலிலும் இதே சம்பவம் எதிரொலித்திருக்கிறது.
சுற்றுலாவுக்கு வந்த தவெகவினர், வந்தோமா.. ஊரை சுற்றி பார்த்தோமா என்று இல்லாமல், TVK கோஷம் போட்டிருக்கிறார்கள். டூர் வந்ததே அமைதிக்காகத்தான். இங்க வந்தும், கட்சி பெயரை சொல்லி கோஷம் போடுவதெல்லாம் ரொம்ப ஓவர் என சுற்றுலா பயணிகள் முகம் சுளித்திருக்கின்றனர்.
அதேபோல நேற்று நள்ளிரவு வேளாங்கண்ணி தேவாலயத்தில் விஜய் ரசிகர்கள் சிலர் TVK கோஷம் போட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஜய் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு வருகிறார் என்று தகவல் பரவியதையடுத்து, அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். சரி வந்தோமா.. சாமி கும்பிட்டோமா.. என்று இல்லாமல், TVK கோஷம் போட்டு பக்தர்களை பதற வைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஏராளமான வேதனைகளுடன், வேண்டுதலுக்காகதான் பக்தர்கள் வழிபட வருகிறார்கள். அதைகூட புரிந்துக்கொள்ளாமல் திருப்பலியை கெடுக்கும் விதமாக TVK கோஷம் போடுவது என்ன மாதிரியான மனநிலை என்று? பக்தர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அடுத்து இன்னொரு இடத்தில் TVK என கத்துவதற்கு முன்னர் யாராச்சும் சொல்லி நிறுத்துங்களேன்!












Click it and Unblock the Notifications