உடைந்த மண்டை.. விஜய்யின் தவெக - மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மோதல்.. நாகை அருகே பரபரப்பு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் பெருங்கடம்பனூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் தொடர்பாக அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இடையேயும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரின் மண்டை உடைந்ததோடு 3 பேர் காயமடைந்துள்ளனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளார். வரும் 27 ம்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடிகர் விஜய் முதல் அரசியல் மாநாட்டை நடத்த உள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க மாநிலம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்கள் கட்சியின் கொடியை கொடிக்கம்பங்களில் ஏற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் உள்ள பல கிராமங்களில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் நிகழ்வு என்பது நடந்தது.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் பெருங்கடம்பனூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் அருகே இருந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருகட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கீழ்வேலூர் போலீசார் வந்து இருதரப்பையும் சமாதானம் செய்தனர்.
அதன்பிறகு கொடிக்கம்பம் மாற்று இடத்தில் நடப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவரின் கணவரான மாரிமுத்து தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவரது தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளங்கோவன், துரை ஆகியோர் உள்ளனர். அப்போது திடீரென்று மாரிமுத்து மற்றும் இளங்கோவன் தரப்புக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு கைக்கலப்பு நடந்தது.
இதில் மாற்றி மாற்றி இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். அதில் மாரிமுத்துவின் மண்டை உடைந்து ரத்தம் வந்தது. அதேபோல் இளங்கோவன், துரை ஆகியோரும் காயமடைந்தனர். இவர்கள் 3 பேரும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜாவின் இருசக்கர வாகனமும் சேதமானது.
இதுபற்றி கீழ்வேலூர் போலீசார் விசாரைணையை தொடங்கி உள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாரிமுத்து முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வந்தார். அந்த கட்சியினரின் உதவியுடன் தான் அவரது மனைவி ஊராட்சி மன்ற தேர்தலில் வென்றுள்ளதாகவும், தற்போது விஜய் கட்சி தொடங்கிய நிலையில் மாரிமுத்து தவெகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதனால் ஏற்கனவே இருதரப்புக்கும் இடையே மனஸ்தாபம் இருந்த நிலையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications