காதல் திருமணம் செய்த மகள்... மனைவி, குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை - நாகையில் ஷாக்
நாகை அருகே மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டதால் விரக்தியில் மனைவி, மகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்: ஒரு காதல் திருமணம் குடும்பத்தையே காவு வாங்கியுள்ளது. மகள் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக அவமானம் தாங்காமல் தனது மனைவி குழந்தைகளை கொலை செய்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் தந்தை. இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தையே கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் லட்சுமணன். நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த புதுச்சேரி கிராமத்தில் உணவகம் நடத்தி வந்தார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் தனலட்சுமி, வினோதினி, அட்சயா ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.
மூத்த மகள் தனலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் அதிக மன உளைச்சலில் இருந்தார். தனது உணவகத்தை கூட திறக்காமல் இருந்துள்ளார். நாளுக்கு நாள் லட்சுமணனின் வேதனை அதிகரித்தது.

கொலை செய்த லட்சுமணன்
மன உளைச்சலில் இருந்த லட்சுமணன் யாருமே எதிர்பாராத முடிவை எடுத்தார். நேற்று நள்ளிரவு மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள் வினோதினி அக்ஷயா ஆகியோர் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார். துடிக்க துடிக்க குடும்பத்தினரை கொன்று விட்ட தானும் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தார்.

தூக்கிட்டு தற்கொலை
ரத்த வெள்ளத்தில் குடும்பத்தினர் உயிரிழந்த நிலையில் இருக்க, அதைப்பார்த்த லட்சுமணன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாத நிலையில் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினர். கதவு திறக்காமல் போகவே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

போலீஸ் விசாரணை
புகாரின் பேரில் காவல்துறையினர் வந்து வீட்டை சோதனை செய்ததில் 4 பேரும் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஜவஹர் நேரில் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பறிபோன 4 உயிர்கள்
நான்கு பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு பெண்ணின் காதல் திருமணம் குடும்பத்தையே காவு வாங்கியுள்ளது. அக்கம் பக்கத்தினரின் பேச்சுக்கு பயந்து மூன்று பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் லட்சுமணன்.












Click it and Unblock the Notifications