இதற்கு மேல் ஒன்றுமில்லை... விஷ பாட்டில்களுடன் போராட்டம்... நாகை விவசாயிகள் கண்ணீர்
நாகை: விளைநிலங்களில் கெயில் குழாய் பதித்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரம் கெயில் நிறுவனம், எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், விளைநிலங்களில் கெயில் குழாய் பதித்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி, முக்கறும்பூரில் பருத்தி வயலில் கையில் விஷ பாட்டில்களுடன் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சோறு போட்ட விவசாயிகள்
ஏற்கனவே மழை பொய்த்து போனதால், விவசாயிகள் படாதபாடு பட்டு வருகின்றனர். தற்போது, இருக்கிற ஒரே வாழ்வாதாரத்தையும் அழித்தால், எங்கே செல்வது என்று விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனர். நெருக்கடிகளால், ஊருக்கு சோறு போட்ட விவசாயிகள் பலர், விவசாயத்தை விட்டு, விட்டு கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் கூறினர்.

கடும் எதிர்ப்பு
முன்னதாக, முடிகண்டநல்லூரில் விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் நாற்றுகளை நட்டுள்ள நிலையில், அதன் வழியாக குழாய்களை பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் வயலில் இறங்கி உடலில் சேற்றை பூசிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குழாய்களை பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

கட்சித் தலைவர்கள் கண்டனம்
அதே சமயம், காவிரி டெல்டாவில் பயிர் இருக்கிற வயல்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications