பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்... மயிலாடுதுறை அருகே ஆச்சரியம்..!
நாகை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பறவைகளுக்காக ஊர் மக்கள் தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதில்லை.
கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் வேம்பு மற்றும் புளிய மரங்கள் நிறைய உள்ளன. இந்த மரங்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. நத்தைகொத்தி, நாரை, கொக்கு, பாம்புத்தாரா, உள்ளிட்ட பறைவைகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வந்து தங்குவது வழக்கம்.
இந்தாண்டு அதன்படி ஆயிரக்கணக்கில் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக பெரம்பூர் கிராமத்தில் உள்ள மரங்களில் தங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவிலிருந்து எல்லாம் இந்த கிராமத்திற்கு அபூர்வ பறவைகள் வரும் என ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். வேதாரன்யம் மற்றும் வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும் மடையான், நீர்காக்கை உள்ளிட்ட பறவைகள் பெரம்பூர் கிராமத்திற்கு வருமாம்.
இந்த பறவைகளை காக்க வேண்டும் என ஊர்மக்கள் ஒன்று கூடி பேசி முடிவெடுத்து அதன்படி பல ஆண்டுகளாக தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதை கைவிட்டுள்ளனர். இரவு பகல் என பறவைகள் இடும் ரீங்கார சத்தம் தங்கள் ஊருக்கே அழகை தருவதாக பெரம்பூர் கிராம மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
அண்ணாத்த படம் ரிலீசையொட்டி... திருச்சி ஹோட்டலில் 1 ரூபாய்க்கு தோசை விற்பனை..!
பறவைகளை வேட்டையாடு நோக்கில் ஊருக்கு யாராவது நுழைந்தால் கூட தாங்கள் ஒன்றுகூடி விரட்டியடித்து விடுவோம் என கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் பறவைகள் குறித்த புரிதலை சிறுவர், சிறுமிகளுக்கும் பெற்றோர் ஏற்படுத்தி விடுவதால் அவர்களும் பட்டாசு வேண்டும் என அடம் பிடிப்பதில்லை எனவும் பெரம்பூர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
பறவைகளுக்காக பட்டாசு வெடிக்கும் வழக்கத்தை தவிர்த்து வரும் பெரம்பூர் கிராமமக்கள் உண்மையிலேயே பாராட்டத்தக்க வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்காது.