40 ஆண்டுகளுக்கு பிறகு.. தொடங்கிய அடுத்த நாளே.. நாகை - இலங்கை கப்பல் சேவை திடீர் ரத்து.. என்னாச்சு?
நாகை: நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை மீண்டும் துவங்கப்பட்டு இருந்த நிலையில், இன்று கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையில் விரைவு பயணிகள் கப்பல் சேவையை தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை இணைந்து தொடங்க திட்டமிட்டன. மத்திய வெளியுறவுத் துறை மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலமாக நாகப்பட்டினத்தில் பயணியர் முனையம் அமைப்பது, துறைமுக கால்வாயை தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், செரியாபாணி என்ற கப்பல் கேரள மாநிலம் கொச்சியில் தயாரிக்கப்பட்டு கடந்த வாரம் சனிக்கிழமை நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. சோதனை ஓட்டம் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில், நேற்று முதல் இந்த பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நாகை துறைமுகத்தில் காலை நடந்தது. பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், அமைச்சர்கள் எ.வ.வேலு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை 8.15 மணியளவில் 50 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை நோக்கி கப்பல் புறப்பட்டது. நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு செல்ல இந்த கப்பலின் பயண கட்டணம் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 7,670 ஆகும்.
நேற்று ஒருநாள் மட்டும் 75 சதவிகித கட்டண சலுகை அளிக்கப்பட்டு இருந்தது. நாகை துறைமுகத்தில் இருந்து 50 பயணிகளுடன் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு சென்ற கப்பல் நண்பகல் 12.15 மணிக்கு இலங்கை காங்கேசன்துறைக்கு சென்று சேர்ந்தது. அதன்பிறகு காங்கேசந்துறையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு 29 பயணிகளுடன் புறப்பட்டு வந்த கப்பல் நாகை துறைமுகத்தை மாலை 5.15 மணிக்கு வந்தடைந்தது.
முதல் நாளான நேற்று பயணிகள் பலரும் ஆர்வத்துடன் கப்பலை செல்பி எடுத்தனர். இந்த நிலையில், நாகை - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கப்பலில் பயணம் செய்ய வெறும் 7 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்து இருந்ததால் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்ட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதியே கப்பல் சேவை தொடங்குவதாக இருந்த நிலையில், ரத்தாகி மீண்டும் 12 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த தேதியிலும் கப்பல் சேவை இயக்கப்படாமல் நேற்றுதான் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. பயணிகள் கப்பல் சேவை தொடங்கிய மறுநாளே போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் கப்பல் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இனி திங்கள், புதன், வெளி ஆகிய நாட்களில் மட்டுமே கப்பல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கப்பலில் பயணக்கட்ட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதை குறைக்க வேண்ட்டும் என்று மத்திய அமைச்சர் சர்பனாந்த சோனாவாலிடம் தமிழக அமைச்சர் எ.வ வேலு வலியுறுத்தி இருந்தார். இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியதாக எ.வ.வேலு கூறியிருந்தார். இதனால் பயணக்கட்டணம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications