குழந்தைக்கு ஆசைப்பட்ட கலைமதி முட்டுக்கட்டை போட்ட சதீஷ் - அடித்துக்கொன்ற மாமனார் கைது
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளிடையே ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்துள்ளது. தனது மாப்பிள்ளையையே இரும்புக்கம்மியால் அடித்துக்கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டிணம்: தன்னை விட படிப்பிலும் அறிவிலும் அதிகமாக உள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர் சந்தேக புத்தியால் வாழ்க்கையை இழந்ததோடு உயிரையும் இழந்துள்ளார். சொந்த மாமனாரே அவரை அடித்து கொலை செய்துள்ளார். தகுதிக்கு மீறிய காதல் கடைசியில் தகராறில்தான் முடியும் என்பது அந்த இளைஞரின் விசயத்தில் உண்மையாகியுள்ளது.
மாமனாரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர் பெயர் சதீஷ்குமார் என்பதாகும். இவர் தலைச்சங்காட்டை சேர்ந்த ராஜாராமன் என்பவரின் மகனாவார் எஸ்எஸ்எல்சி வரை மட்டுமே படித்த சதீஷ்குமார் அப்பராசபுத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் கலைமதியை காதலித்தார். கலைமதி எம்எஸ்சி எம்பில் பட்டதாரி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.
தனது தகுதிக்கு ஏற்றவர் இல்லை என்றாலும் காதலுக்கு மதிப்பு கொடுத்து சதீஷ்குமாரை கரம் பிடித்தார் கலைமதி. சிலமாதங்கள் கூட மணவாழ்க்கை நீடிக்கவில்லை கசந்து போனது. காரணம் சதீஷ்குமாரின் சந்தேகபுத்தி. கலைமதியை வேலைக்கு போகவேண்டாம் என்று சண்டை போட்ட சதீஷ், ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தினாராம்.
குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டார் கலைமதி. அதற்கு முட்டுக்கட்டை போட்டார் சதீஷ். சண்டை முற்றிப்போகவே பெற்றோர் வீட்டுக்கு கிளம்பினார் கலைமதி. மகளிர் காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். பிரிந்து வாழ்ந்த இருவரையும் காவல்துறையினர் சமாதானம் செய்தும் எதுவும் நடக்கவில்லை. இரு தினங்களுக்கு முன் தனது தாய்மாமனை பார்ப்பதற்காக கலைமதியின் ஊரான அப்பராசப்புதூர் வந்த சதீஷ்குமார் வழியில் தனது மாமனார் நாகராஜை சந்தித்து பேசினார்.
தனது மனைவியை தன்னோடு அனுப்பிவைக்கும்படி தகராறு செய்தாராம். இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் தனது கையிலிருந்த கத்தியை கொண்டு சதீஷை குத்தியதோடு, அருகில் கிடந்த இரும்பு கம்பியை கொண்டு தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த சதீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்தார். சதீஷ் குடும்பத்தினர் புகார் அளித்ததை தொடர்ந்து காவல் துறையினர் நாகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.