“ஆர்எஸ்எஸ் விரித்த வலையில்.. எடப்பாடி பழனிசாமி! அதிமுகவை காப்பாற்ற முடியாது” - மனிதநேய மக்கள் கட்சி
மயிலாடுதுறை: பாஜக, ஆர்எஸ்எஸ் விரித்த வலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக விழுந்துவிட்டது என்றும், இனி அதிமுகவை காப்பாற்ற முடியாது எனவும் என மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது கூறியிருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் பகுதியில், மனித நேய மக்கள் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல்சமது கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது,

"கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி மதுரையில் இரண்டு மிகமுக்கியமான கோரிக்கைகளை மையப்படுத்தி ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். வக்பு வாரிய சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி மற்றும் மாநாட்டை மதுரையில் நடத்தியுள்ளோம்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளங்கி மாவட்டம் தோறும் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறோம். மயிலாடுதுறையில் வருகின்ற 20ம் தேதி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முஸ்லிம் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சியில் குறைந்துகொண்டே வருகிறது. பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் தூண்டுதலால் கருப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
முன்பு சிஏஏ சட்டம், இப்போது வக்பு வாரிய திருத்த சட்டம் இப்படியாக தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது. 80 பேர் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய இடத்தில் 24 பேர்தான் உள்ளனர். மக்கள் தொகை்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
அதிமுகவின் நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறோம். திராவிட இயக்கங்களால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள எல்லா மாநில மக்களும் திரும்பி பார்க்கக்கூடிய வகையில் தமிழகம் முன்னேறி இருக்கிறது. இந்த நிலையை தகர்ப்பதற்காக பாஜக குறிப்பாக ஆர்எஸ்எஸ் விரித்த வலையில் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவும் விழுந்துவிட்டது.
செங்கோட்டையனுடைய நிலைப்பாடாக இருந்தாலும் சரி, ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குவதாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் பின்னால் ஆர்எஸ்எஸ்,பாஜக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பழனிச்சாமி மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். இனி அதிமுகவை காப்பாற்ற முடியாது என்கிற நிலை தமிழ்நாட்டில் வந்திருக்கிறது. இதை வெளிப்படுத்த கூடிய நிகழ்வுதான் செங்கோட்டையன் உடைய நிலையும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.
பாஜக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டு திருட்டு குறித்து ராகுல் காந்தி வௌிப்படுத்திகொண்டு இருக்கிறார். ஓட்டு திருட்டில் ஈடுபட்ட கும்பல் இந்தியாவில் தலைகாட்ட முடியாத அளவிற்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை வௌிப்படுத்துவார்கள். பீகார் தேர்தல் பல்வேறு வகையில் அவர்களுக்கு அச்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த தேர்தலில் எதையாவது சொல்லி வாக்குகளை பெற்றுவிட முடியாதா என்ற வகையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு என தேர்தல் நாடகத்தை நடத்தி வருகின்றனர்.
விஜயின் செயல்பாட்டில் பல்வேறு சந்தேகங்களை அரசியல் நோக்கர்கள் வௌிப்படுத்திகொண்டு இருக்கிறார்கள். கொள்கை எதிரி, அரசியல் எதிரி என்று வார்த்தை பிரயோகங்களை தெரிவித்தாலும் திமுகவிற்கு எதிராக சொல்லும் வார்த்தைகள் கொள்கை எதிர்கள் மீது கூறவில்லை எனபதாலும் தேர்தல் நெருங்க சாயம் வெளுக்கும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் யார் என்பதை மக்கள் வௌிப்படுத்துவார்கள். தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்குள் உள்ள பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்கப்பட வேண்டும். வன்முறையை யார் கையில் எடுத்தாலும் தமிழக அரசு இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications