நாகை டூ இலங்கை கப்பல் பயணம்: டிக்கெட் எவ்வளவு? எவ்வளவு நேரப் பயணம் தெரியுமா?
நாகை: நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை வரைக்கும் நாளை முதல் கப்பல் சேவை தொடங்க உள்ள நிலையில், கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலான மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வந்த இந்தக் கனவு பயணமானது இப்போதுதான் பயணிகளின் கைக்கு எட்டி இருக்கிறது.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறை வரைக்குமான கப்பல் போக்குவரத்தைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஆனால், அப்போது கனமழை பெய்து வந்ததால் இந்தச் சேவை தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் தனது பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிலை உருவானது.

இப்போது சூழ்நிலை சகஜமாகி உள்ளதால் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 'சிவகங்கை' எனப் பெயரிடப்பட்ட கப்பலானது கடந்த 2 நாட்கள் முன்னதாக அந்தமானிலிருந்து கடல் மார்க்கமாகச் சென்னையை அடைந்து இப்போது நாகை துறைமுகத்தைச் சென்றடைந்தது. தனது பயணத்தைத் தொடங்க இருக்கிறது. இந்தக் கப்பலில் சாதாரண வகுப்பு, ப்ரீமியம் என இரு வகையான வகுப்புகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன.
சாதாரண வகுப்பில் 123 இருக்கைகள் உள்ளன. அதற்கான கட்டணமாக ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் உள்ளன. இதில் ஒரு பயணிக்கு 7,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இந்தக் கப்பல் முழுமையாகக் குளிர்சாதன வசதி கொண்டது. மேலும் இதில் தொலைக்காட்சி வசதியும் உள்ளது. இதன் உள்ளாகவே உணவகமும் செயல்படுகிறது. அதில் தென்னிந்திய உணவுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இந்தக் கப்பலின் நிறுவன இயக்குநர் சுந்தர்ராஜன், "கப்பலில் படுக்கை வசதிக்கு என்று தனியாக அறைகள் உள்ளன. உடைமைகளை வைத்துக் கொள்வதற்குத் தனியே அறைகள் உள்ளன. உணவுகளை முன்கூட்டியே ஆர்டர் செய்து தேவையான அளவுக்குச் சாப்பிடலாம்" என்கிறார். மேலும் காலை 8 மணிக்கு நாகையிலிருந்து புறப்படும் இந்தச் சிவகங்கை கப்பல், 4 மணி நேரத்திற்குள் இலங்கை காங்கேசன் துறையை அடைந்துவிடும். மறுபடியும் இலங்கையிலிருந்து மதியம் 2 மணிக்குப் புறப்படும் இது மாலை 6 மணிக்கு நாகையை வந்தடையும் என்றும் சுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் மாலுமி நிரஞ்சன், "இந்தக் கப்பல் அதிவேகமாகச் செல்லக் கூடிய திறன் படைத்தது. அதாவது மணிக்கு 25 கிமீட்டர் வேகத்தில் போகும்.பயணிகளுக்கு தனித்தனியே பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஆகவே, எந்த அச்சமும் தேவையில்லை" என்கிறார். இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்தக் கப்பல் பயணத்தை ஒரு அனுபவமாகப் பெற வேண்டும் எனப் பலர் ஆர்வத்துடன் உள்ளனர்.
கிட்டத்தட்ட 115 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கைக்கு ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து வ.உ.சிதம்பரம் பிள்ளை இலங்கைக்குக் கப்பல் விட்டார். அதற்காக அவர் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டினார். அதற்காக இரண்டு கப்பல்களை வாங்கி வந்து இயக்கினார். இறுதியில் வெள்ளையர்கள் அவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தனர். இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அவரது வாழ்க்கையையும் வியாபாரத்தையும் முடக்கிப் போட்டனர். இறுதியில் அவர் கப்பல் கம்பெனி மூழ்கியது. சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளை எட்டி உள்ள நிலையில் இப்போது இலங்கைக்குப் பயணிகள் கப்பல் நாளை முதல் பயணிக்கிறது. இந்தக் கனவு நிறைவேற இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது என்பது ஒரு வரலாற்று உண்மை.












Click it and Unblock the Notifications