நாகையில் கண்கலங்கி நின்ற விவசாயிகள்.. “நாங்க என்ன சாகவா முடியும்?” நெல் கொள்முதல் குறித்து வேதனை
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டு வந்து அடுக்கியிருந்த நெல் மூட்டைகள் போதுமான பாதுகாப்பு இல்லாததால் மழையில் நனைந்திருக்கிறது. இதனால், நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர் என விவசாயிகள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை என டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

பருவமழைக்கு முன்னதாகவே நெல் அறுவடை முடிந்து இருந்தாலும், நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாகப்பட்டினத்தில் விவசாயிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கின்றனர். மாவட்டத்தில் சுமார் 80,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. முன்பு எப்போதும் இல்லாத அளவில், இந்த ஆண்டு அதிக அளவில் அறுவடை மகசூல் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லை, மாவட்டத்தில் உள்ள 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு கொள்முதலுக்காக கொடுத்து காத்திருக்கின்றனர்.
போதுமான லாரிகள் இல்லாததால் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றனர். தற்போது மழை தொடங்கியுள்ளதால் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க தார் பாய்களை கொண்டு நெல்லை மூடி பாதுகாத்து வைத்திருக்கின்றனர். இருப்பினும் மழை தீவிரமடையும் போது நெல் மூட்டைகள் ஈரமடைந்திருக்கின்றன. நாகை சங்கமங்கலம் பகுதியில் மழை அதிகமாக இருப்பதால், கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. இதனால் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவது தாமதம் ஆகியிருக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் "இந்த நெல் கொள்முதல் நிலையம் கட்டி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், சாதாரண லேசான மழைக்கே இங்கு தண்ணீர் தேங்குகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க போதிய நடவடிக்கை எடுத்தால் என்ன? விவசாயிகளிடம் 40 ரூபாய் வாங்குகிறார்கள். அதை வைத்தாவது இந்த இடத்தை மேம்படுத்தி இருக்கலாம். இந்த நிலையத்தை அரசுதானே சரியாக பராமரிக்க வேண்டும்?
எங்களுக்கென சொந்தமாக நிலம் கிடையாது. கோயில் நிலத்தில்தான் நாங்கள் விவசாயம் செய்கிறோம். கல்லும், மண்ணுமாக சும்மா இருந்த பூமியை பொன் விளையும் பூமியாக மாற்றி இருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக தரிசாக கிடந்த நிலத்தை கோயில் நிலத்தை, வேளாண் நிலமாக மாற்றி இருக்கிறோம். ஆனால், அந்த நிலத்தில் கூட எங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் எங்குதான் போவது? எங்களால் சாகவா முடியும்? எங்கள் குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரம் இதை நம்பிதான் இருக்கிறது. விவசாயிகளின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து, தற்போது தேங்கியிருக்கும் மழை நீரை அகற்ற இன்ஜினை பயன்படுத்துகிறார்களாம். இதை முன்கூட்டியே செய்திருந்தால் என்ன?" என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications