அந்த நாள் வந்துருச்சு.. நாகை டூ இலங்கை கப்பல் சேவை இன்று தொடக்கம்! சீறிப்பாய போகும் “சிரியா பாணி”
நாகை: தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு இயக்கப்பட உள்ள சிரியா பாணி கப்பல் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது.
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசந்துறைமுகத்திற்கு செல்லும் 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணிகள் கப்பல் சேவையை தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை இணைந்து தொடங்குகின்றன. மத்திய வெளியுறவுத் துறை மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலமாக நாகப்பட்டினத்தில் பயணியர் முனையம் அமைப்பது, துறைமுக கால்வாயை தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைச்சர் எ.வ.வேலு நாகை துறைமுகத்தில் இந்த பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம், விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழிற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாச்சாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும்." என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்காக சிரியா பாணி என்ற கப்பல் கேரள மாநிலம் கொச்சியில் தயாரிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. சோதனை ஓட்டம் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில், 10 ஆம் தேதி பயணிகளுக்காக கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அன்று கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications