நாகை தர்காவில் 600 கிலோ அரிசி, 200 கிலோ ஆடு! சுடச்சுட தயாரான ஆபத்து சோறு! 200 ஆண்டு பாரம்பரியம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், கூத்தூர் தர்கா ஷரீபில் 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆபத்து சோறு என்ற கறி சோறு வழங்கும் விழா நடந்தது. இதில் 600 கிலோ அரிசி, 200 கிலோ ஆட்டுக்கறி, ஆயிரம் கிலோ காய்கறி கொண்டு சமைத்து நாள் முழுவதும் சாதி, மத பாகுபாடின்றி மக்களுக்கு கறிச்சோறு வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் குருக்கத்தி பிரதான சாலையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக அடக்கம் ஆன பீர்காயபு ஒலியுல்லாஹ், சித்திக் முகம்மது ஷகீது ஒலியுல்லாஹ், ஜெர்மன் பீவி அம்மா ஒலியுல்லாஹ் ஆகியோரின் தர்ஹா ஷரீபில் அமைந்துள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்பு காலரா பெரு நோய் தொற்று காலத்தில் பொது மக்களை இந்த தர்காவில் தங்க வைத்து சோறு சமைத்து கொடுத்து நோயை விரட்டியதாக நம்பிக்கை உள்ளது. அதை தொடர்ந்து பாரம்பரியமாக 200 ஆண்டுகளாக பொது மக்களிடம் உணவு பொருட்களை பெற்று பொது மக்களுக்கு ஆபத்து மவுலுது எனப்படும் ஆபத்து சோறு வழங்கப்பட்டு வருகிறது.

ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்கும் முன்பு நடைபெறும் இவ்விழா இன்று நடைபெற்றது. இரவில் ஆடுகள் வெட்டப்பட்டு 600 கிலோ அரிசி, 200 கிலோ ஆட்டுக்கறி, ஆயிரம் கிலோ காய்கறி கொண்டு கறி சோறு சமைத்து மௌலுது ஷரீப் எனப்படும் பிரார்த்தனை நடைபெற்றது.

இதையடுத்து அதிகாலை முதல் நாள் முழுவதும் கறி சோறு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சாதி, மத பாகுபாடின்றி 5000 த்துற்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆபத்து சோறு என்னும் கறி சோறு சாப்பிட்டு சென்றனர்.

இது குறித்து தர்கா நிர்வாகத்தினர் கூறும் போது ஆண்டு தோறும் நடைபெறும் ஆபத்து சோறு விழாவில் கறி சோற்றை பாத்திரங்களில் வீடுகளுக்கு கொண்டு செல்ல கூடாது. நாள் முழுவதும் மக்களுக்கு கறி சோறு வழங்கப்படுகிறது. கொரோனா காலக்கட்டத்தில் இது போன்று ஆபத்து சோறு சமைத்து போட்டதால் தங்கள் கிராமங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications