நாகூர் கடற்கரையில் தொடரும் கச்சா எண்ணெய் கசிவு! மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் எச்சரிக்கை!
நாகூர் அருகே கச்சா எண்ணெய் குழாய் கசிவு 3-வது நாளாக தொடருகிறது.
நாகப்பட்டினம்: நாகூர் அருகே கடற்கரையில் கச்சா எண்ணெய் கசிவு பாதிப்பு 3-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்களை உடனே அகற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. காவிரி படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து இங்கு சுத்தகரிக்கப்படுகிறது. இதற்கான குழாய்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டன.

கடந்த சில நாட்களாக இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்து, கடல் நீரில் கலந்து வருகிறது. இதனால் இந்த எண்ணெய் குழாய்களை அகற்ற வேண்டும் என மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3 நாட்களாக இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே இந்த பிரச்சனை தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியில் கடலுக்கடியில் போடப்பட்டுள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Chennai Petroleum Corporation Limited -CPCL) நிறுவனத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்குப் பேரழிவினை ஏற்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்குக் குழாய்கள் பதிக்க முறைகேடாக அனுமதியளித்து, கடலினையும், மீனவர் வாழ்வாதாரத்தையும் நாசப்படுத்தியுள்ள இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, விளை நிலங்களின் வழியே எண்ணெய் குழாய்களைப் புதைத்து நிலத்தை நாசமாக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுத்த நிலையில், தற்போது கடலுக்கடியில் புதைத்து சுற்றுச்சூழலையும், மீனவ மக்களின் நலவாழ்வினையும் நாசப்படுத்த முனைந்துள்ளது பெருங்கொடுமையாகும். கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால், நாகூர் மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதுடன், கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவில் உயிரிழக்கும் பேராபத்தும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பேரழிவிற்கான முழுப் பொறுப்பையும் ஆளும் அரசுகளே ஏற்க வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தமிழ்நாட்டுக் கடற்பகுதியில் குழாய்கள் பதிக்க எரிஎண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்வதுடன், கடலுக்கடியில் புதைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications