நாகையில் திடீர் கோயில்... சாமியாக மாறிய வேப்பமரம்! ஸ்வீட்டான பால் வருதாம்
நாகை: ஜெகநாதபுரத்தில் உள்ள வேப்ப மரத்தில் பால் பொங்கி வழிந்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் வேப்ப மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
Recommended Video
தமிழ்நாட்டில் திடீர் கோயில்களும் திடீர் சாமியார்களும் தோன்றுவது புதிதல்ல. இயல்புக்கு மாறாக வித்தியாசமாக ஏதாவது நடந்துவிட்டால் உடனே கடவுள் அவதரித்து இருப்பதாகக்கூறி அதை கோயிலாக மாற்றி வழிபட தொடங்கிவிடுவார்கள். இவ்வாறு பல போலி சாமியார்களும் உருவாகி மக்களை ஏமாற்றிய கதையை நாம் பல முறை கேட்டிருப்போம்.
நாகப்பட்டினம் மாவட்டம மஞ்சக் கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட புத்தூர் ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தாத்தா சண்முகம். இவரது வீட்டின் அருகே இரண்டு ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரம் இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த வேப்பமரத்திலிருந்து திடீரென புத்தாண்டு அன்று வெள்ளை நிற திரவம் நுரையுடன் வடிந்தது.
இதனை சுவைத்துப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அது இனிப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த அந்த திரவம் நாளாக நாளாக மரத்தில் இருந்து அதிகமாகி பொங்கி வடியத் துவங்கியது. வேப்பமரத்தில் பால் பொங்கி வழிகிறது என்ற செய்தி சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவத் தொடங்கியது. அதன் விளைவாக நூற்றுக்கணக்கான மக்கள் வேப்பமரத்தை ஆச்சரியமாக பார்த்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு அந்த வேப்ப மரத்திற்கு மஞ்சள் புத்தாடைகள் உடுத்தி அபிசேகம் செய்த கிராம மக்கள் படையல் செய்தனர். இதுப்பற்றி அந்த கிராம மக்கள் கூறுகையில், 50 ஆண்டுகள் பழமையான மரங்களில் பால் போன்ற திரவம் எப்போதாவது வடியும். ஆனால் இரண்டு ஆண்டுகளே ஆன சிறிய மரத்தில் பால் வடிவது ஆச்சர்யமாக உள்ளது என்கின்றனர்.
இந்த பால் வடியும் வேப்ப மரத்தை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களும் ஆச்சர்யத்துடன் பார்த்து வணங்கி செல்கின்றனர்.