செந்தில் பாலாஜி கூறியது போலவே.. நாகை அருகே.. அணில் ஓடியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது.. மின்தடை!
நாகை: நாகை அருகே அணில் ஓடியதால் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. அதனை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக மிகவும் பிரபலமான ஒரே பெயர் அணில். இந்த நாட்களில் அணிலை பற்றி பேசாதவர்கள் யாரும் இல்லை.
தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைந்ததும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. ஏன் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள்.

அணிலால்தான் மின்தடை
இதற்கு பதிலளிக்கும் வகையில் நிருபர்களிடம் கூறிய தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, '' கடந்த 9 மாதங்களாக தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெற வில்லை. தற்போது மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் ஒரு சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மேலும் அணில்கள் மின் கம்பிகளில் ஓடுவதால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்றி உரசி மின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது'' என்று கூறினார்.

பிரபலமான அணிலார்
இதன் பின்பு தான் அணிலார் தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக தொடங்கினார். அணிலை வைத்து மீம்ஸ்கள் கொடிகட்டி பறந்தன. இது என்ன சம்பந்தம் இல்லாத பதில் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதே வேளையில் அணில்களால் மின்தடை ஏற்படும் என்பது பல்வேறு நடக்க கூடியதுதான். இதுவரை கேள்வி படாததால் தமிழ்நாடுக்கு இந்த பதில் வித்தியாசமாக தெரிகிறது என்று அமைச்சருக்கு ஆதரவாகவும் ஒரு பக்கம் குரல்கள் வந்தன.

மின்கம்பி அறுந்தது
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதை நிரூபிக்கும் வகையில் நாகை அருகே மின் கம்பி ஒன்று அணில் ஓடியதால் திடீரென அறுந்து விழுந்து மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை அருகே சாமந்தான்பேட்டையில் மின்கம்பி அறுந்து விழுந்த இடத்துக்கு மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்றனர்.
மின்கம்பம் அருகே அணில் ஒன்று இறந்து கிடந்தது. அணில் ஓடியதால்தான் மின்கம்பி அறுந்து விழுந்தது என்று மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

மின்வாரிய ஊழியர்கள் விளக்கம்
''மரங்களுக்கு அருகில் மின்கம்பங்கள் உள்ளதால் அணில்கள் மின்கம்பிகளில் ஒடி விளையாடுகின்றன. அணிலின் வாய்ப்பகுதி இன்சுலேட்டரிலும், வால் பகுதி கம்பத்திலும் உரசியதால் இன்சுலேட்டர் வெடித்துள்ளது. இதனால் மின்கம்பியின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததுடன் மின்சாரம் தாக்கி அணிலும் இறந்திருக்கிறது'' என்று மின்வாரிய ஊழியர்கள் கூறினார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டு பின்பு சீரானது.












Click it and Unblock the Notifications