வேளாங்கண்ணியில் பதற்றம்.. வெட்டிக்கொலை செய்யப்பட்ட பைனான்சியர்.. போலீஸ் குவிப்பு.. என்ன நடந்தது?
நாகை : நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தொழில் போட்டி காரணமாக பைனான்சியர் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டனர்.
Recommended Video
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில், தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார். மேலும், இவர் அப்பகுதியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வருகிறார். தொழில் போட்டி காரணமாக, சிலருக்கு இவருடன் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த நண்பருடன், முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில் மனோகரன் பேசிகொண்டிருந்துள்ளார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள், திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ,அருகில் இருந்த மணிவேல் என்பவர், தடுக்க முயன்றபோது, மர்ம நபர்கள் அவரது கையையும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனால் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அப்போது தடுக்க முற்பட்ட மனோகரனின் நண்பர் மணிவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பான தகவல் அறிந்த நாகை போலீஸ் சூப்பிரண்ட் ஜவகர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்து வருகிறார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பைனான்சியர் மனோகரின் உடல் நாகை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பைனான்சியரை படுகொலைசெய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் தெற்குபொய்கைநல்லூர் கிராம மக்கள் நள்ளிரவில் நாகை அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த நாகை ASP சுகுமார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உத்தரவாதம் அளித்தார். இதனையடுத்து, சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பைனான்சியரை படுகொலை சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வேளாங்கண்ணியில் பிரபல பைனான்சியரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர பலாத்கார, கொலை குற்றவாளிகளுக்கு சுதந்திரம்.. இதுவே பாஜகவின் அமுத பெருவிழா - ஒவைசி காட்டம்