"மீன் விற்க முடியல".. இருட்டில் மீனவ கிராமத்தில் குபுகுபுவென புகுந்த நபர்கள்.. ரகளை.. நடுங்கும் நாகை
2 மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது, இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது
நாகை: 2 வேறு மீனவ கிராமங்களுக்கு இடையே திடீரென ஏற்பட்ட மோதல் காரணமாக நாகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. இதில், 50 பேர் கொண்ட கும்பல் மீனவ கிராமத்தின் உள்ளே புகுந்து வீடு, வாகனங்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கி ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில், மீன் விற்பனை செய்வது தொடர்பாகவும், ஏலம் விடுவது தொடர்பாகவும், கடந்த சில காலமாகவே மோதல் நிலவி வருகிறது.
குறிப்பாக, மேல பட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே இந்த மோதல் அதிகரித்து காணப்பட்டு வருகிறது..

மீனவ கிராமம்
மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று மேல பட்டினச்சேரி கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தையும் கையில் எடுத்தனர்.. இந்த விவகாரம் முற்றி வருவதால், மாவட்ட நிர்வாகமும் இவர்கள் விஷயத்தில் தலையிட்டது.. அதன்படி, மேல பட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும் தமிழக அரசால் கட்டப்பட்ட துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் மீன் ஏலம் விடுவதற்கு, சம உரிமை வழங்க வேண்டும் என்று, சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடந்த சமாதான பேச்சு வார்த்தை கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.

தாக்குதல்
இதனிடையே, மேலபட்டினச்சேரி கிராம நிர்வாகிகள் சுரேஷ், மற்றுமொரு சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது மற்றொரு தரப்பு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது... இதனால் பாதிக்கப்பட்ட மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 2 மணிக்கு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

ரகளை - வீடியோ
கிராமத்தில் யாரும் இல்லாததை அறிந்த, மற்றொரு தரப்பு மீனவர்களோ, மேல பட்டினச்சேரி பகுதியில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை அடித்து நொறுக்கி, இருசக்கர வாகனங்களை உடைத்து சேதப்படுத்தி கையில் ஆயுதங்களுடன் 50 பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்டனர்.. கையில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு நுழைந்து வீடுகள் மற்றும் பைக்குகளை சேதப்படுத்தியது.. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

சிசிடிவி காட்சி
இதையடுத்து, நாகை எஸ்பி ஜவஹர் தலைமையில், மோதல் நடந்த பகுதியில் அதி விரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. காயமடைந்த மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் இரண்டு பேர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, வீடுகளில் தாக்குதல் நடத்தி பொருட்களை சேதப்படுத்திய வழக்கில் 15 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications