நரேந்திர மோடிக்கு எதிராக வேட்புமனு செய்யாதீர்… அய்யாக்கண்ணு பொன். ராதா வேண்டுகோள்
நாகர்கோவில்: வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அய்யாக்கண்ணு தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 111 விவசாயிகள், வேட்புமனுத் தாக்கல் செய்வதை, வாபஸ் பெற வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை தலைநகரில் முன்னெடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சமீபத்தில், நடந்த 5 மாநில தேர்தலில் கூட விவசாய கடன்கள் தள்ளுபடி விவகாரம் பாஜகவுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது. அந்தவகையில், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன், சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைப்பதியில், இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
துரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி வைப்பதும், மாற்றிக் கொள்வதும் சகஜமாக நடப்பது தான் என்றார். இந்த காலகட்டத்தில், கடும் விமர்சன வார்த்தைகளை ஸ்டாலின் சொல்வது ஏற்புடையது இல்லை என்றும் கூறினார்.
மேலும், வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, 111 தமிழக விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் முடிவை, அய்யாக்கண்ணு வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.