“விஜய்யை தலைவராக்க தயாராக உள்ளோம்” - தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் உறுதி
நாகர்கோவில்: கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் கடந்த 1980ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்தான் முத்துகிருஷ்ணன். அதன் பின்னர் இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே முத்துகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்.
கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில், தவெக நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்ட முத்துக்கிருஷ்ணன், விஜய்யை தலைவராக்க தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில், 80களுக்கு பிறகு திமுகவின் சுரேஷ் ராஜன், அதிமுகவில் தளவாய் சுந்தரம் ஆகியோர் களமிறங்கினர். எனவே இந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியது. அதன் பின்னர் முத்துகிருஷ்ணனுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த அவர் பின்னர் பாஜக பக்கம் தாவினார். ஆனால் அங்கேயும் பெரியதாக இவரை கண்டு கொண்டது போல தெரியவில்லை. எனவே சில நாட்களிலேயே மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, மீண்டும் அதிமுகவிலிருந்து விலகி கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது தவெகவில் இணைந்திருக்கிறார்.
1980ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவர், 35,613 வாக்குகள் பெற்று 47 சதவீத வாக்குகள் உடன் எம்எல்ஏவாக தேர்வாகியிருந்தார். அடுத்த தேர்தலில் இவருக்கு பதிலாக பெருமாள் பிள்ளை என்பவருக்கு அதிமுக வாய்ப்பளித்திருந்தது. அதன் பின்னரான தேர்தல்களில், அம்ம முத்து பிள்ளையும், தளவாய் சுந்தரமும் அதிமுக சார்பில் களமிறங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications