கொளுத்தும் வெயிலுக்கு பிரேக்! நெல்லை, குமரியை மொத்தமாக நனைத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி
நாகர்கோவில்: இன்று இரவு தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்த நிலையில், தற்போது நாகர்கோவில், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நேற்று கன்னியாகுமரியில் லேசான மழை பெய்திருந்தாலும், வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே பதிவாகியிருந்தது. குறிப்பாக தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவாகியிருந்தது. அதாவது 100 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியிருந்தது.

கடலோரப் பகுதிகளில் 91- 98 டிகிரி பாரன்ஹீட் வரையும், மலைப்பகுதிகளில் 71-86 டிகிரி பாரன்ஹீட் வரையும் வெப்பம் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 டிகிரியும், கரூர் பரமத்தியில் 104 டிகிரி வரையும் வெப்பம் பதிவாகியிருந்தது.
இது தவிர சேலம். தருமபுரி, திருப்பத்தூர், திருச்சி, மதுரை (விமான நிலையம் & நகரம்) மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102-104 டிகிரி வரையில் பதிவாகியுள்ளது. இதே கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், திருத்தணி மற்றும் சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 100-102 டிகிரி வரை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்த அளவில் மீனம்பாக்கத்தில் 100.7 டிகிரியும் நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரியும் வெப்பம் பதிவாகியிருந்தது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த அளவில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை தொடங்கி ஏப்.7ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. குறிப்பாக மாலை 6-7 மணியளவில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதாவது, கோயம்புத்தூர், திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, பாளையங்கோட்டை, வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வுருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications