சாவர்க்கருக்கும்.. சுசீந்தரம் கோயிலுக்கும் என்ன தொடர்பு? வாழ்க கோஷம் போட்ட RSS.. மனோ தங்கராஜ் கேள்வி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகவும் பிரசித்திப்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டத்தின்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சாவர்க்கர் வாழ்க என முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சுசீந்தரம் கோயிலுக்கும்.. காந்தியை கொன்ற சாவர்க்கருக்கும் என்ன தொடர்பு? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும் அவர் பேசியதாவது, "கன்னியாமரி மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல், வரலாற்று பின்னணி கொண்டது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் குடி கொண்டிருக்கக்கூடிய கோயில் இது.

இக்கோயிலின் மார்கழி தேர் திருவிழா நிகழ்ச்சியில், பாஜகவும் ஒரு சில மதவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள், தேர் பிடிக்கின்ற நேரத்தில்.. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சார்வர்க்கர் வாழ்க என்று முழக்கமிடுகின்றனர். இது உண்மையிலேயே அங்கு வந்திருக்கக்கூடிய பக்தர்களை மிகவும் புண்படுத்தக்கூடிய ஒரு செயல்.
அது மட்டுமல்ல, காந்தி இந்த தேசத்தின் ஒற்றுமைக்காகவும், மத ஒற்றுமைக்காகவும், சாதி ஏற்றத்தாழ்வு ஒழிய வேண்டும் என்றும் குரல் கொடுத்ததற்காக படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்வர்க்கர். அவருக்கும் தானமலைசாமி கோவிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?
பாஜாகாவும், மதவாத அமைப்புகளும் திருக்கோயில்களில் நுழைந்து.. அங்கு இருக்கக்கூடிய மக்களிடம் தவறான கருத்துக்களை கொண்டு செல்லுகின்ற முயற்சியை இந்த சம்பவம் மிக தெளிவாக காட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்க கூடியது. மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய ஒன்று.
வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பெருமை. இதை உலகே வியந்த பார்க்கிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில், காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை சொல்லி வாழ்க என்று கோயிலுக்குள் பாஜகவும், மதவாத கும்பல்களும் முழுக்கமிடுகிறார்கள். அப்படியெனில் மதத்தை வைத்து அரசியல் செய்வதை தவிர, இவர்களுக்கு வேற என்ன நோக்கம் இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications