எனக்கு 20.. உனக்கு 2000.. மலைக்க வைக்கும் வசூல் வேட்டை.. நாகர்கோவில் நகராட்சியில்!
நாகர்கோவில்: சினிமா பாணியில் நாகர்கோவில் நகராட்சி அலுவலகத்தில் வசூல் வேட்டை நடைபெறுவதாக மக்கள் குமுறுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்ய நூதன பண வசூல் நடைபெறுகிறதாம். அதாவது பெண் அதிகாரி ஆட்களை அமைத்து வசூல் வேட்டை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சி வளாகத்தில் செயல்படும் நகர்புற வாழ்வாதார மையத்தில், தமிழக அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் கிடைக்க வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் பட்டியலில் இணைப்பதற்காக ஏழை மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

விண்ணப்பப் படிவங்கள்
கடந்த 2 நாட்களாக பெறப்பட்டு வரும் இந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய அதிகாரிகள் அமைத்த சில தனிநபர்கள் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை பணம் வசூலித்து வருகின்றனர்.

வசூலிக்க எதிர்ப்பு
அவ்வாறு வசூலிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வந்த நகராட்சி ஆணையாளர் சரவணகுமார், பணம் வசூலித்து வரும் தனிநபர்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார்.

அதிகாரிகள் நியமித்த ஆட்கள்
அப்போது பூர்த்தி செய்து பணம் கேட்கும் நபர்களை அதிகாரிகள் நியமித்தது தெரியவந்தது. ஏழை மக்களிடம் விண்ணப்பத்தின் பெயரால் தனிநபர்கள் பணம் வசூலிப்பதை இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பணம் வசூலுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்களா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.

மக்கள் குமுறல்
குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் இந்த வசூல் வேட்டையை தடுத்து நிறுத்தவில்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications