"பாசி அல்வா" கொடுத்த திமுகவை தெரியாதா.. வேட்புமனு தாக்கல் செய்த கையோடு.. பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Recommended Video
முன்னதாக காமராஜர் ,எம்ஜிஆர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நாகர்கோவில் பாஜக அலுவலகத்திலிருந்து தொண்டர்களுடன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாக வந்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அரவிந்திடம் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கடல் பாசி அல்வா
நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, 1967 ஆம் ஆண்டு கடல் பாசியில் அல்வா செய்து தரப்படும் என்று திமுக ஆட்சியில் வாக்குறுதி அளித்துவிட்டு பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தார்கள்.
திட்டங்கள் நிறைவேறும்
ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் வாக்குறுதி அளித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி
அ.தி.மு.க. கூட்டணியில் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு சட்டசபை தொகுதிகள் பாரதிய ஜனதாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிள்ளியூர் தொகுதியில் த.மா.கா.வும், கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க.வும் போட்டியிடுகிறது.
லோக்சபா இடைத் தேர்தல்
கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தலுக்காக, பா.ஜ.க வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் முதலில் அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் வசந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். எனவே, இருமுனைப் போட்டியாக, நேருக்கு நேர் மோதல் அங்கு உள்ளது.