அதிவேகம்.. மரத்தில் மோதி நொறுங்கிய கார்.. திருவிழாவுக்கு போன 4 இளைஞர்கள் பலி.. நாமக்கல் அருகே சோகம்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் என்ற இடத்தில், சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சீராம்பாளையத்தில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிழக்கு தொட்டிபாளையத்தைச் சேர்ந்த லோகேஷ், தனசேகர், கவின், சிவா, ஸ்ரீதர் ஆகிய இளைஞர்கள் சொகுசு காரில் சீராம்பாளையம் நோக்கிச் சென்றுள்ளனர்.
தனசேகர், காரை ஓட்டிச் சென்ற நிலையில், அதிவேகம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையைக் கடந்து மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் லோகேஷ், தனசேகர், கவின், சிவா, ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, லேசான காயங்களுடன் ஸ்ரீதர் என்பவர் உயிர் தப்பியுள்ளார்.
கார் விபத்தில் காயமடைந்த ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்த 4 இளைஞர்களின் உடல்களையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications