நாமக்கல்லில் வேலை முடிந்து வீடு திரும்பிய பெண் போலீஸ் ஏட்டு.. எமனாக வந்த லாரி.. நொடியில் நடந்த சோகம்
நாமக்கல்: நாமக்கல்லில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி முடிந்து திரும்பிய போது லாரி மோதி பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டியை சேர்ந்த 49 வயதாகும் செல்வம் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா (47). இவர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கவியரசன் (21), சோலை அரசு (19) ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர்.

தலைமை காவலர் அமுதா நாமக்கல் எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். பணியை முடித்துவிட்டு கடந்த புதன்கிழமை இரவு அமுதா தனது ஸ்கூட்டியில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.அவர் ஆயில்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்த போது, பொன்குறிச்சி-அணைப்பாளையம் புதிய பைபாஸ் சாலையில் உள்ள குருசாமிபாளையம் அருகே தனியார் பேக்கரி கடை அருகே லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் தலைமை காவலர் அமுதா ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த தலைமை காவலர் அமுதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி உடனடியாக புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமுதாவின் உடலை கைப்பற்றினார்கள். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று காலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவரது உடலை பார்த்து அவரது குழந்தைகள் மற்றும் சக பெண் போலீசார் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.
ஏட்டு அமுதாவின் உடலுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமுதாவின் உடல் அவரது கணவரின் ஊரான ஆயில்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள மயானத்தில் 18 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications