அதிமுக ‘தேசியம்’.. திராவிடம் அப்புறம் தான்.. பாஜகவும் சேர்ந்து வளருது.. கேபி ராமலிங்கம் பரபர பேச்சு!
நாமக்கல் : பாஜக மத அரசியல் செய்வதில்லை. திமுக தான் சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து செயல்பட்டு வருகிறது என விமர்சித்துள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார், ஆனால் தமிழக அரசு எந்த பதிலும் கூறாமல் மழுப்பி வருகிறது என அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், அதிமுகவோடு இணைந்து பாஜகவும் வளர்கிறது. பாஜகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுகின்றன எனக் கூறியுள்ளார் கே.பி.ராமலிங்கம்.
Exclusive: ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு முன்பே நான் ஆயிட்டேன்... வெடிக்கும் கே.பி.ராமலிங்கம்..!
பித்தலாட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட அலுவலகத்தை கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேபி ராமலிங்கம், "மத்திய அரசின் நிதி உதவியால் தான் தமிழக உள்ளாட்சி நடைபெற்று வருகிறது. இதனை திமுக அரசு மறைத்து ஏதோ தானே நிதி வழங்குவது போல பித்தலாட்டம் செய்கிறது." எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
தாராளம்
மேலும் பேசிய அவர், பிரதமர் மோடி செயல் திறமை மிக்க தலைவர் என்று பிரான்சின் பிரதமர் புகழ்ந்துரைத்துள்ளார். அதனால் தான் ஜி20 நாடுகளின் தலைவராக பிரதமர் மோடி அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் பள்ளி, கல்லூரிகள் முன்பு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழல்
மத்திய அரசு அறிவித்துள்ள ஜல் சக்தி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக இணைப்புகள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. தற்போது வரை 65 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் அதில் 30 லட்சம் இணைப்புகள் குளறுபடியோடு ஊழல் நிறைந்துள்ளதாக காணப்படுகிறது என விமர்சித்தார்.
பாஜக விஸ்வரூபம்
பாஜக பிசாசு போல வளர்ந்துள்ளதாக திமுக அமைச்சர் கூறுகிறார். பாஜக தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆன்மீகம், தேசியம் மூலம் தான் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்துள்ளதால் பல ஆண்டு காலமாக பாஜக மக்கள் பணி ஆற்றி வருகிறது. தமிழ்நாடு ஆன்மீக பூமியாகத் திகழ்கிறது. ஆன்மீகத்தால் தான் தமிழ் மொழி வளர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு மழுப்பல்
தமிழ்நாட்டில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றைக் கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஆனால் அதற்கு தமிழக அரசு எந்த பதிலும் கூறாமல் மழுப்பி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
வாயை அடைப்போம்
மேலும், தமிழகத்தில் திமுகவினர் ஊழல் செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் பலவீனத்தை மறைப்பதற்காகவே பிற கட்சிகளை குறை கூறி வருகிறார். தமிழக முதலமைச்சர் வாயை அடக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பாரதிய ஜனதா கட்சி அவரது வாயை அடைக்கும் என்றார்.
பாஜக மத அரசியல்?
மேலும், அதிமுகவோடு இணைந்து பாஜகவும் வளர்கிறது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தேசியக் கட்சியாக தொடங்கினார். முதலில் தேசியம் அதற்குப் பிறகுதான் திராவிடம் என்று கூறினார். பாஜகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுகின்றன. பாஜக மத அரசியல் செய்வதில்லை. திமுக தான் சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து செயல்பட்டு வருகிறது என விமர்சித்துள்ளார்.