சர்வாதிகாரியா மாறுவேன்.. ஒரே ஒருவரால் நாங்க வெட்கித் தலை குனிய முடியாது - சாட்டை வீசிய ஸ்டாலின்!
நாமக்கல் : ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதுக்கினால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எச்சரிக்கை விடுத்ள்ளார்.
தவறு செய்யும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கட்சி ரீதியாக மட்டுமின்றி சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதலைமைச்சர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
நீங்கள் தவறு செய்தால் மக்கள் உங்களைவிட்டு விலகுவதுடன், உங்களைப் புறக்கணிப்பார்கள், கட்சிக்கும் ஆட்சிக்கும் யாரும் களங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சாதாரண பதவின்னு நினைக்காதீங்க.. அண்ணா வார்டு உறுப்பினராக போட்டியிட்டவர்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
திமுக சார்பில் மாநாடு
தி.மு.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்தியில் உரையாற்றினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அப்போது பேசிய அவர், மக்கள் பணிகளின் முதல் படி உள்ளாட்சி அமைப்புகள்தான். மக்கள் தொண்டுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களின் ஒரு கையெழுத்து மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். எனத் தெரிவித்தார்.
நானும் உள்ளாட்சி பிரதிதியாக இருந்தவன்
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், தந்தை பெரியார் ஈரோடு நகர்மன்ற தலைவராகவே தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பெருந்தலைவர் காமராஜர் விருதுநகர் நகராட்சி தலைவராகவே தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டவர். இன்று முதலமைச்சராக இருக்கும் நானும் சென்னை மாநகர மேயராக இருந்துள்ளேன் எனப் பேசினார்.
நல்ல பெயர் எடுப்பது சிரமம்
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் பல திட்டங்கள் நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்வதால் என்னை மக்கள் வரவேற்கின்றனர், பாராட்டுகின்றனர். மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது. மிசா காலத்தில் அரசியலே வேண்டாம் என்று சிலர் எழுதி கொடுத்தபோது, நான் அப்படி எழுதித்தர மறுத்தேன்.
தவறு செய்தால் புறக்கணிப்பார்கள்
நீங்கள் தவறு செய்தால் உங்களை விட்டு மக்கள் விலகுவார்கள்,
உங்களைப் புறக்கணிப்பார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்ற வேண்டும். புதிதாக மக்கள் பணிக்கு வந்திருக்கும் பெண்களுக்கு பயமோ கூச்சமோ இருக்கக்கூடாது. பெண்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். தாங்கள் செய்யவேண்டிய பொறுப்புகளை கணவர்களிடம் தரக்கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
களங்கம் ஏற்படுத்தக்கூடாது
50 ஆண்டுகால உழைப்பில் கிடைத்தது தான் இந்த முதல்வர் பதவி. கோடிக்கணக்கான கழகத் தொண்டர்கள் கொடுத்த பதவி இது. என்னை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். எனவே கலகம் ஏற்படுத்தும் செயலை யாரும் செய்யக்கூடாது. கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கம் ஏற்படும் நிலையை யாரும் ஏற்படுத்தி விடக்கூடாது. யார் தவறு செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்வாதிகாரியாக மாறுவேன்
தவறு செய்யும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கட்சி ரீதியாக மட்டுமின்றி சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன். யாரோ செய்யும் தவறினால், முதல்வராகிய நானும், கோடிக்கணக்கான தொண்டர்களும் வெட்கித் தலை குனியும் நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது. கவுன்சிலர்கள் முதல் மேயர்கள் வரை யார் மீதும் எந்த புகாரும் வரக்கூடாது. ஒழுங்கீனங்கள், முறைகேடுகள் அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்." எனக் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.