அமைதிச் சின்னமாக புறாவை ஏன் பறக்க விடுகிறோம் தெரியுமா? திமுக எம்.பி. ராஜேஷ்குமார் சொன்ன ருசிகர கதை!
நாமக்கல்: அமைதிச் சின்னமாக புறாவை அடையாளப்படுத்துவது ஏன்? என திமுக எம்.பி. ராஜேஷ்குமார் ருசிகர விளக்கம் அளித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற உலக அமைதி ஓவியப் போட்டியை தொடங்கி வைத்து பேசிய போது புறா குறித்த சுவாரஸ்ய தகவலை அவர் பகிர்ந்துக் கொண்டார். அதன் விவரம் வருமாறு;
வெள்ளை நிற புறா: ''நாம் எந்த வித அச்சுறுத்தலும் இன்றி, இங்கு அமைதியாக இருக்கிறோம். உலக அமைதிக்கான சின்னமாக, வெள்ளை நிற புறா விளங்குகிறது. புறா ஏன் அமைதிக்கான சின்னமாக இருக்கிறது என்பதற்கு, ஒரு சில சான்றுகள் உள்ளன. இரு நாட்டு அரசர்களுக்கு இடையே தூதுவர்களாக புறாக்கள் இருந்தது என சொல்வார்கள். அதையும் தாண்டி, மற்றொரு உதாரணமும் புராணங்களில் இருக்கிறது.''

புறா கூடு: ''மத்திய ஆசியாவில் ஒரு சமயம், இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டது. ஒரு மன்னன், இன்னொரு நாட்டின் மீது போர் தொடுக்கச் செல்கிறான். போருக்கு செல்லும் போது, ஒரு காலை நேரத்தில், தனது தலைகவசத்தை அணிய சென்றபோது, அதில் ஒரு புறா கூடு கட்டியிருந்தது. இதைப் பார்த்த மன்னனின் தாய், புறா கூட்டை கலைக்க வேண்டாம். தலைகவசம் அணியாமல் போருக்கு புறப்பட்டு செல்லும்படி கூறுகிறார். ''
தாயின் அறிவுரை: ''தாயின் அறிவுரையை ஏற்று, மன்னனும் தலைகவசம் அணியாமல் போர் முனைக்கு செல்கிறான். போர்க்களத்தில், இதைப்பார்த்த எதிரி நாட்டு மன்னன், ஏன் தலைகவசம் அணியாமல் வந்துள்ளார் என விசாரித்துள்ளான். அப்போது, புறா கூட்டை கலைக்க மனமின்றி மன்னன் போருக்கு வந்துள்ளது குறித்து அவருக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனால், மனம் இறங்கிய எதிரி நாட்டு மன்னன், புறாவுக்காக தனது உயிரை பணயம் வைத்து போரிட வந்துள்ள மன்னனின் நிலை அறிந்து, போரை கைவிட்டு விட்டு சமாதானமாக போக முடிவு செய்து, இருவரும் போரை கைவிட்டனர்.''
அமைதிக்கான சின்னம்: ''அன்று முதல் புறா என்பது அமைதிக்கான சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. இதை புராணங்கள் மூலம் அறிய முடிகிறது. மனித இனத்தின் தலையாய கடமை ஒற்றுமையும், அமைதியும் ஆகும்.'' இவ்வாறு திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசினார்.












Click it and Unblock the Notifications