MLA எலக்ஷனில் களமிறங்கும் MP? பரபரக்கும் நாமக்கல் தொகுதி!
நாமக்கல்: நாமக்கல் சட்டசபைத் தொகுதியில், திமுகவைச் சேர்ந்த சிட்டிங் எம்.பி.யே நேரடியாக களமிறங்கக்கூடும் என்ற தகவல், அங்கு தேர்தல் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.
நாமக்கல் தொகுதி:
நாமக்கல் சட்டசபைத் தொகுதியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் மிக முக்கிய தொகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பால், லாரி, கோழிப்பண்ணை, முட்டை, ரிக் வண்டி, கல்வி நிலையங்கள், என ஏராளமான வளம் கொழிக்கும் தொழில்கள் நடக்கும் தொகுதியாக நாமக்கல் அறியப்படுகிறது. ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் கோயில், நவலடியான் கோயில் என பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களும் நாமக்கல் தொகுதியில் அமைந்துள்ளன. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் நாமக்கல் நகருக்கு அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

எம்.எல்.ஏ. சீட்:
கடந்த 2006ஆம் ஆண்டு வரை தனித்தொகுதியாக இருந்த நாமக்கல், 2011 முதல் பொதுத்தொகுதியாக மாறியது. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் கடந்த 1996ஆம் ஆண்டுக்கு பிறகு 25 ஆண்டுகள் கழித்து கடந்த 2021ஆம் ஆண்டு தான் இங்கு திமுக நேரடியாக களம் கண்டது. இந்நிலையில் வரும் 2026 சட்டசபைத் தேர்தலிலும் மீண்டும் திமுகவே நேரடியாக நாமக்கல்லில் போட்டியிடத் தயாராகிவிட்டது. அதிமுக மாஜி அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டம் என்பதால் நாமக்கல் தொகுதியை கைப்பற்ற அவரும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். இதனால் தங்கமணியையும், அதிமுக-பாஜக கூட்டணியில் நிறுத்தப்படும் வேட்பாளரையும் முழு பலத்துடன் எதிர்க்க பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா வகைகளிலும் வலிமையான வேட்பாளரை களமிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.
நாமக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட சிட்டிங் எம்.எல்.ஏ.வான ராமலிங்கம் ஆர்வம் காட்டினாலும், அதிமுக -பாஜக தரப்பில் மாஜி அமைச்சர் தங்கமணி மூலம் கொடுக்கப்படும் குடைச்சல்களை அவரால் சமாளிக்க முடியுமா என்பது உள்ளூர் திமுக நிர்வாகிகள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகிய இருவரது குட்புக்கிலும் இடம்பெற்றுள்ள நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான ராஜேஷ்குமார் திமுக தரப்பில் நாமக்கல் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்ற தகவல் லோக்கல் நிர்வாகிகள் மத்தியில் பேசு பொருளாகி வருகிறது.
கையில் மனுக்கள்:
ராஜேஷ்குமாரை பொறுத்தவரை டெல்லிக்கு சென்றாலும் சரி, சென்னைக்கு சென்றாலும் சரி கோழிப்பண்ணை, லாரித் தொழில், மாவட்ட திட்டப்பணிகள் என எப்போதும் கையில் 4 மனுக்களுடன் தான் செல்வாராம். இதனிடையே நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் என 3 தொகுதிகள் வருகின்றன. இந்த 3 தொகுதிகளிலும் கட்சியின் சாதாரண அடிப்படை உறுப்பினர் இல்லத்தில் ஒரு துக்க நிகழ்வு நடந்தால் ரூ.10,000 உதவித்தொகை வழங்குவதை ராஜேஷ்குமார் எம்.பி. வழக்கமாக கொண்டுள்ளார். இது அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அவர் மீதான இமேஜை உயர்த்தியிருப்பது அவருக்கான ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
-அர்ஷத் கான்












Click it and Unblock the Notifications