வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்து.. 4 பேர் பலி.. நாமக்கல் அருகே அதிகாலையில் சோகம்
நாமக்கல்: நாமக்கல் அருகே மோகனூர் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதிகளில் தில்லைக்குமார் என்பவர் வீட்டில் வைத்து இருந்த பட்டாசுகள் இன்று அதிகாலை 3 மணியளவில் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் இருந்த தில்லைக்குமார், அவரது மனைவி பிரியா, தாய் செல்வி மற்றும் பக்கத்து வீட்டு மூதாட்டி என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள மேட்டுத்தெருவில் தில்லைக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி பிரியா மற்றும் தாய் செல்வியுடன் வசித்து வந்தார்.
தில்லைக்குமார் "தில்லை பயர் ஒர்க்ஸ்" என்ற பெயரில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள்
தில்லைக்குமார் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசுகள் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் தனது வீட்டில் பட்டாசுகளை அதிக அளவில் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் இவரது ஊரில் நாளை நடக்கும் கோவில் திருவிழாவுக்காகவும் அதிகளவில் பட்டாசுகளை வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார். வழக்கம்போல் நேற்று தில்லைக்குமார் வீட்டின் மாடியில் படுத்து தூங்கியிருக்கிறார். மனைவி பிரியாவும், தாய் செல்வியும் வீட்டின் தரைத்தளத்தில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது.
சிலிண்டர்களும் வெடித்து சிதறியதால்
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தில்லைக்குமார் வீட்டில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியது. பட்டாசுகள் வெடித்ததில் அந்தப் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. இதில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர்களும் வெடித்து சிதறியதால் தில்லைக்குமாரின் வீடும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் பிரியாவும், செல்வியும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மேலும் பட்டாசுள் வெடித்து சிதறியதால் தீயும் விடாமல் பற்றி எரிந்தது.
திடுக்கிட்டு எழுந்த மக்கள்
இதேபோல் இந்த தீ அவரது பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. இதனால் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த அப்பகுதி மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பட்டாசுகள் வெடித்துச்சிதறியதில் தில்லைக்குமார் வீடு உள்பட அருகில் உள்ள 4 வீடுகளிலும் தீ பற்றி எரிந்ததாக சொல்லப்படுகிறது. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து வருகின்றனர்.
4 பேர் பலி
இந்த விபத்தில் தில்லைக்குமார் மற்றும் அவரது மனைவி பிரியா மற்றும் தாய் செல்வி ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தில்லைக்குமாரின் 3 வயது மகள் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதேபோல் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெரியாக்காள் (வயது 73) என்ற மூதாட்டியும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை
அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ், மோகனூர் வட்டாட்சியர் ஜானகி ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது? இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.