நாமக்கல்லில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி! ரூ 20 லட்சம் இழப்பீடு!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ரோகித், அங்குள்ள பாதாள சாக்கடையில் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 4ஆவது வார்டு பகுதி சின்னமுதலைபட்டி. இங்கு கடக்கால் வீதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ரோகித் (4). புத்தாண்டு தினமான நேற்று ரோகித், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே புதிதாக பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி குழியில் நிரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருந்தது. விளையாடிக் கொண்டே சென்ற ரோகித், அந்த குழியில் விழுந்து நீரில் மூழ்கினான்.
இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாமல் அக்கம்பக்கத்தில் பெற்றோர் தேடினர். அப்போது அவர்கள் வீட்டருகே குழந்தை இறந்த நிலையில் மிதந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அப்போது குழந்தையை கட்டி பிடித்து பெற்றோர் அழுதது காண்போரை கலங்கச் செய்தது. இந்த குழியை குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் தோண்டியது தெரியவந்தது. குழியை தோண்டிய நிலையில் அதை சுற்றி எந்த பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்படாதது குறித்து அப்பகுதியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் அந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். இது குறித்து போராட்டம் நடத்திய நிலையில் போலீஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, குழந்தையின் இழப்புக்கு ரூ 20 லட்சம் இழப்பீடு அளித்தனர்.












Click it and Unblock the Notifications